காவிரி: மத்திய அரசிடம் நிபுணர் குழு 'அவசர' இடைக்கால அறிக்கை தாக்கல்!!
டெல்லி: தமிழகத்திலும் கர்நாடகத்திலும் அணைகளையும், காவிரி டெல்டா பாசன பகுதிகளையும் 4 நாட்கள் பார்வையிட்ட நிபுணர் குழுவினர், மத்திய அரசிடம் தங்கள் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
காவிரியில் தண்ணீர் திறந்து விடச் சொல்லி விதித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி கர்நாடகம் தாக்கல் செய்த சீராய்வு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால், மத்திய அரசின் உத்தரவை ஏற்று, அவர்கள் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ததாகத் தெரிகிறது.
டெல்லியில் கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி நடந்த காவிரி ஆணைய கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தினமும் வினாடிக்கு 9,000 கன அடி வீதம் அக்டோபர் 15ம் தேதி வரை தண்ணீர் திறந்து விடுமாறு ஆணையத்தின் தலைவரான பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார்.
ஆனால் இதை கர்நாடகம் ஏற்கவில்லை. இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. கடந்த செப்டம்பர் 28ம் தேதி தமிழகத்தின் கோரிக்கையை விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரி ஆணைய உத்தரவின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவிட்டது. அத்துடன் கர்நாடக அரசின் போக்குக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 29ம் தேதி நள்ளிரவு முதல் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கன்னட அமைப்பினரும், விவசாயிகள் சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு கோரி, கர்நாடக அரசு கடந்த 4ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே, காவிரி டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 15ம்தேதிக்கு பிறகு சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீரின் அளவு குறித்து ஆய்வு செய்ய மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் ஆர்.கே.குப்தா தலைமையில் மத்திய நீர்வள ஆணைய இயக்குனர் (கண்காணிப்பு) கோவை டி.கே.சிவராஜன், கண்காணிப்பு பொறியாளர் வீரேந்திர சர்மா, துணை இயக்குநர் (பாசன திட்டம்) பிரதீப் தாகூர் ஆகிய 4 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தது. அந்த குழுவினர் கடந்த 5ம் தேதி தஞ்சை, திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள கல்லணையை பார்வையிட்டனர்.
பின்னர் அங்குள்ள அதிகாரிகளிடம் சம்பா சாகுபடி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் சம்பா சாகுபடி நிலைமை குறித்து ஆய்வு செய்த மத்திய நிபுணர் குழுவினர், நேற்று சென்னை திரும்பினர்.
மத்திய நிபுணர் குழு இன்று தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியை சந்தித்து ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வு குறித்து உடனடியாக அறிக்கையை தயார் செய்து அளிக்குமாறு நிபுணர் குழுவுக்கு மத்திய நீர்வள அமைச்சகம் உத்தரவிட்டது.
இதனால், நிபுணர் குழுவினர் நேற்று மாலையே சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமாரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். சுமார் அரை மணி நேரம் மட்டுமே நடந்த இந்த சந்திப்பின் போது, தாங்கள் பார்வையிட்ட டெல்டா பகுதிகளின் நிலைமை பற்றி தமிழக அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசித்தனர்.
அதைத் தொடர்ந்து மத்திய நிபுணர் குழு நேற்றிரவே தனது இடைக்கால அறிக்கையை தயார் செய்து டெல்லி அனுப்பிவிட்டதாக உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நிபுணர் குழுவினர் இன்றே டெல்லி திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் இறுதி அறிக்கையின் நகல்கள் தமிழக அரசுக்கும் அளிக்கப்படும்.
இதேபோல் கர்நாடகம் சென்ற மத்திய குழுவினரும், அங்குள்ள காவிரி பாசன பகுதிகளில் தங்கள் ஆய்வுப்பணியை முடித்துக்கொண்டு நேற்று டெல்லி திரும்பிவிட்டனர். அவர்களும் தங்களது இடைக்கால அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.
இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தும்போது கேட்கும் கேள்விகளுக்கு இந்த இடைக்கால அறிக்கையை அடிப்படையாக வைத்து மத்திய அரசு பதிலளிக்கலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே தமிழகத்தில் இந்த மத்தியக் குழு சரியாகவே பார்வையிடவில்லை என்றும், முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும் தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக காவிரி கடைமடை பகுதிகளை இந்தக் குழு சரிவர பார்வையிடவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications