ஆளுநர் ரோசய்யாவிற்கு எதிரான மனு ..உச்சநீதிமன்றம் தள்ளுபடி
டெல்லி: தமிழக ஆளுநர் ரோசய்யாவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
ரோசய்யா ஆந்திர மாநில முதல்வராக இருந்த போது தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அரசு நிலத்தை முறைகேடாக ஒதுக்கியதாகவும், இதனால் அரசுக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் மோகன்லால் ஆந்திர மாநில நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கே.ரோசய்யாவுக்கு லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதற்கு ஆந்திர மாநில நீதிமன்றம் தடை விதித்தது.
இதனிடையே ரோசய்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் ஆக உத்தரவிட வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி ஏ.கே. பட்நாயக் தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இதில் அடிப்படை உரிமை மீறல் எதுவும் இல்லை என்று கூறி வழக்கறிஞர் மோகன்லால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தவிட்டனர்.
ஆந்திர மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ரோசய்ய கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ம் தேதி தமிழ்நாடு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications