'மல்ட்டி கலர்' பச்சை குத்தியும் புண்ணியமில்லாமல் போச்சே... புலம்பும் வெற்றிவேல்!
சென்னை: அம்மாவின் உருவத்தை எனது கையில் பல மணி நேரம் செலவழித்து கஷ்டப்பட்டு பச்சை குத்தியும் கூட அதற்குப் புண்ணியமில்லாமல் போய் விட்டதே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் வட சென்னை வடக்கு அதிமுக மாவட்ட செயலாளராக இருந்து, ஜெயக்குமார் புண்ணியத்தால் பதவியை இழந்து நிற்கும் வெற்றிவேல்.
சபாநாயகராக இருந்த ஜெயக்குமார் தேவையில்லாமல் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடியது, ஆதரவாளர்களின் புகழாரத்தை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு புன்னகைத்தது, இத்யாதி, இத்யாதி காரணங்களுக்காக பதவியை இழந்தார். அவரோடு அவரது ஆதரவாளர்கள் பலரது தலையும் சேர்ந்து உருண்டது. அவர்களில் ஒருவர்தான் வெற்றிவேல்.
வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் வெற்றிவேல். எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார். இவர் ஜெயக்குமாருக்கு 54 பவுன் தங்கச் சங்கிலி கொடுத்து இப்போது பதவியைப் பறி கொடுத்திருக்கிறார்.
பதவியை இழந்துள்ள அவர் தற்போது புலம்பிக் கொண்டிருக்கிறாராம். கடந்த வாரம்தான் 4 மணி நேரம் செலவிட்டு தநது கையில் ஜெயலலிதாவின் உருவத்தை பல்வேறு நிறங்களில் பச்சைக் குத்திக் கொண்டாராம் வெற்றிவேல். ஆனால் தன்னைப் போய் அம்மா கைவிட்டு விட்டாரே என்று வருத்தத்தில் இருக்கிறாராம் வெற்றிவேல்.
ஜெயக்குமாரின் பிறந்த நாள் ஏற்பாடுகளை முன்னின்று கவனமாக கவனித்தவர் வெற்றிவேல்தான். அதேபோல தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரான செந்தமிழனும் கூடவே இருந்து கவனித்தார். இவரது பதவியும் இப்போது பறி போய் விட்டது. செந்தமிழன் எப்போது பார்த்தாலும் ஜெயக்குமார் வீட்டில்தான் இருப்பாராம்.
என்ன செய்து என்ன புண்ணியம் இப்போது அம்மா வீட்டுக்குப் பக்கத்தில் கூட போக முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே...!












Click it and Unblock the Notifications