காவிரிப் பிரச்சினை வாழ்வாதாரப் பிரச்சினை, அனைவரும் ஒன்றிணைவோம்: டி.ராஜா அழைப்பு
திருவாரூர்: காவிரிப் பிரச்சினை தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை. அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூரில் இன்று ராஜா தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் ராஜா பேசுகையில், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் இன்னல்களைப் போக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காவிரியில் தேவையான தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும்.
இது கர்நாடகத்துக்கும் மத்திய அரசுக்குமான போராட்டம் அல்ல. தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்கான போராட்டம். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்துகிறது.
காவிரி பிரச்னையில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். தமிழக மக்களின் நிலைமையை உணர்ந்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
தமிழகத்துக்கு உரிய பங்கீட்டு நீரை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீரை நிறுத்தினால், உடனடியாக மத்திய அரசு தலையிட்டு தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.