இனி என்றும் பாமக தனித்தே போட்டியிடும்: டாக்டர் ராமதாஸ்

ராமதாசின் மூத்த மகள் காந்தியம்மை- பரசுராமன் தம்பதியரின் மகன் முகுந்தனுக்கும் ராயபுரம் செல்வராஜ்- லட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர் ஐஸ்வர்யாவுக்கும் இன்று சென்னை எழும்பூர் ராணி மெய்யம்மை அரங்கத்தில் ராமதாஸ் தலைமையில் தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது.
முதலில் மணமக்களின் பெற்றோர் அறிமுகம் செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து மணமக்கள் பெற்றோர்களிடம் ஆசி பெற்றனர். பின்னர் மணமக்கள் இருவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு மாலை மாற்றிக் கொண்டனர். அதன் பிறகு மணமக்களின் தாயார் மங்கள நாணை எடுத்துக் கொடுக்க அதை மணமகள் கழுத்தில் மணமகன் கட்டினார்.
இதையடுத்து மணமக்களை வாழ்த்தி ராமதாஸ் பேசுகையில், 1967ல் ''காகிதப் பூ மணக்காது. காங்கிரஸ் சோஷலிசம் இனிக்காது'' என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள் தமிழகத்தை எந்த அளவுக்கு சீரழித்து சூறையாடி சின்னா பின்னமாக்கி விட்டார்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.
ஆனால் தமிழக வரலாறு உள்ளவரை பெருந்தலைவர் காமராஜரை நாம் நினைத்துத் தான் ஆக வேண்டும். அவரது ஆட்சியில் தான் கல்விக்கு வழி பிறந்தது. அபரிமிதமான தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. பாசனத்திற்காக பெரும் அணைகளை உருவாக்கி, பசுமை புரட்சியை உருவாக்கினார்.
இன்று தரமான கல்வி கிடைக்கிறதா? ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரனுக்கு ஒரு கல்வி வழங்கப்படுகிறது. சமச்சீர் கல்வியில் உடன்பாடு இல்லை என்று, சி.பி.எஸ்.இ கல்வி வேண்டும் என்கிறார்கள். கிராமத்தில் வாழும் குப்பன், சுப்பன் பிள்ளைகளுக்கு சி.பி.எஸ்.இ கல்வி ஏன் கிடைக்கவில்லை, இதைப் பற்றி சிந்தித்தோமா?.
விவசாயம் இன்று எப்படி இருக்கிறது, நெடுஞ்சாலைகளில் செல்லும் போது நன்செய், புன்செய் நிலங்கள் எல்லாம் எப்படி இருக்கின்றன?. விளை நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறி விட்டன.
காமராஜர் பசுமை புரட்சியை உருவாக்கினார். கல்வியில் தமிழகம் இந்தியாவுக்கே வழி காட்டியது. ஆனால் இன்று குடியை கெடுப்பதில் தமிழகம் இந்தியாவுக்கு வழி காட்டுகிறது. மதுக்கடைகள் இல்லாமல் காமராஜர் ஆட்சி நடத்தவில்லையா? காமராஜர், பக்தவச்சலம், ராஜாஜி போன்றோர் ஆட்சி நடத்தவில்லையா?.
நாங்களும் திராவிட கட்சிகளுக்கு துணை இருந்தோம் என்று மேடையில் இருப்பவர்கள் குறை சொல்லலாம். இனி என்றும் பாமக தனித்தே நிற்கும் என்று உறுதிபட கூறிவிட்டோம்.
சினிமா மோகத்தை அதிகரித்தும், மதுவை கொடுத்து மதிமயங்கச் செய்து விட்டார்கள். நதி நீர் உரிமைகளை இழந்தோம். இன்று காவிரி தண்ணீருக்காக ஆளாய் பறக்கிறோம். தமிழினத்தை காப்பாற்ற முன்வாருங்கள் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications