ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் பலி- தலைமறைவு கணவனுக்கு வலை!
நெல்லை: கேரளாவிற்கு செல்லும் வழியில் ரயிலில் இருந்து காதல் கணவரால் தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள கணவனை, போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டியை சேர்ந்த சமுத்திரம் மகள் சுந்தரி என்ற பிச்சம்மாள்(24). ஈரோட்டில் ஒரு மில்லில் வேலை செய்து வந்த இவரும், அங்கு டீ விற்ற கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த முருகேசன்(28) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1 வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளான்.
இதற்கிடையே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகேசன் திருச்சூரில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறி பிச்சம்மாளை ரயிலில் அழைத்து சென்றார். திருச்சூரை அடுத்த சொர்ணாவூர் என்ற இடத்தில் ரயில் சென்ற போது 5 மாத கர்ப்பிணியான பிச்சம்மாளை, முருகேசன் கீழே தள்ளிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கு வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் மீட்டு திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வயிற்றில் இருந்த குழந்தை இறந்ததால் கர்ப்ப பையை அகற்றிய டாக்டர்கள் பிச்சம்மாளை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பிச்சமாளின் சகோதரன் கண்ணன், திருச்சூர் மற்றும் கடையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இரு மாநில போலீசாரும் வழக்கு பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.
இதையடுத்து நெல்லை எஸ்.பி. விஜேயந்திர பிதாரியிடம் மனு அளித்தார். இந்த நிலையில் பிச்சம்மாள் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நெல்லை ஐகிரவுண்ட் போலீசார் சரியாக விசாரணை நடத்தி அறிக்கை அனுப்பவில்லை. இதனால் பிச்சம்மாள் இயற்கையான மரணம் அடைந்தார் என்று கருதி, அவரது உடலை பரிசோதனை செய்யாமல் மருத்துவமனை நிர்வாகத்தினர், பிச்சம்மாளின் தந்தை சமுத்திரத்திடம் கையெழுத்து வாங்கி கொண்டு உடலை வழங்கினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வேறு வழியின்றி பிச்சம்மாள் உடலை அடக்கம் செய்தவற்காக கடையம் அருகே முதலியார்பட்டி மயானத்திற்கு எடுத்து சென்றனர். அங்கு உடலை எரியுட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. இதை அறிந்த ஆதிதமிழர் பேரவையினர், எஸ்.பி. விஜேயந்திர பிதாரிக்கு தகவல் கொடுத்தனர்.
அவரது உத்தரவின் பேரில் கடையம் போலீசார் மயானத்திற்கு சென்று பிச்சமாளின் உடலை மீட்டு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள முருகேசனை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications