பிரதமருடன் ஜி.கே.வாசன் சந்திப்பு: தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெற்றுத் தரக் கோரிக்கை

அப்போது, கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை காவிரியில் இருந்து பெற்றுத் தருமாறு பிரதமரிடம் வாசன் வாசன் வலியுறுத்தினார்.
காவிரி நதி நீர் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் இந்தச் சந்திப்பு நடந்தது.
காவிரி நீரில் தமிழகத்துக்கு உரிய பங்கு குறித்த உண்மை நிலையை பிரதமரிடம் எடுத்துக் கூறியதுடன் தமிழக விவசாயிகளுக்கு காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வாசன் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக சென்னையில் எண்ணூர் துறைமுக விழாவில் கலந்து கொண்ட வாசன் நிருபர்களிடம் பேசுகையில்,
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற ஆணையையும், பிரதமரின் உத்தரவையும் மீறி செயல்படும் கர்நாடக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கதாகும். இந்த செயல் நியாயமானதல்ல. சட்டப்படியும், நியாயப்படியும் கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பகிர்ந்தளித்திருக்க வேண்டும்.
பிரதமரை பொறுத்தவரை காவிரி ஆணைய கூட்டத்தில் உண்மை நிலமையை அறிந்து இரு மாநில விவசாயிகளின் அவலநிலையை, உண்மை நிலமையை புரிந்ததால் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஆனால் கர்நாடக அரசு பிரதமரின் உத்தரவை மதிக்காமல் தண்ணீர் விட தொடர்ந்து மறுக்கிறது. மீண்டும் நான் பிரதமரை சந்தித்து தமிழகத்தின் உண்மை நிலையையும், அவல நிலையையும் எடுத்துக் கூற உள்ளேன்.
மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா காவிரி விஷயத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாக பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளாரே என்று கேட்டதற்கு பதிலளித்த வாசன், பிரதமரின் தலைமையின் கீழ் உள்ள அனைத்து மத்திய அமைச்சர்களும் பிரதமர் காட்டும் வழியில் தான் செயல்பட வேண்டும். அதுதான் நாட்டுக்கு நல்லது. இதுபோன்ற பிரச்சனைகளில் மத்திய அமைச்சர்கள் பேசும் போது இரு மாநிலங்களின் நல்லுறவை மனதில் வைத்துக் கொண்டு, உறவு கெடாதவாறு பேச வேண்டும். விவசாயிகளின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
திமுக தலைவர் கருணாநிதி 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி கர்நாடக அரசை கலைக்க வேண்டும் என்று கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, ஜனநாயகத்தில் நீதிமன்றத்தையும், சட்டத்தையும் மதிக்காத எந்த மாநில அரசும் மக்கள் நலனை மனதில் கொண்டு செயல்படுபவர் அல்ல என்பதைத் தான் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications