காலை வாரிய இளைஞர் காங்கிரசாரை திட்டி தீர்த்த கார்த்திக் சிதம்பரம்!
சிவகங்கை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் நிறுத்திய நபருக்கு ஓட்டு போடாமல், தோல்வியை அளித்த இளைஞர் காங்கிரசாரை கார்த்திக் சிதம்பரம் திட்டி தீர்த்துவிட்டாராம்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் தேர்வு சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் யுவராஜ் 6,557 வாக்குகள் பெற்று வெற்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்தப்படியாக 3,657 வாக்குகள் பெற்ற விஜய் இளஞ்செழியன் துணை தலைவராகவும், 2,119 வாக்குகள் பெற்ற நாசே ஆர்.ராஜேஷ் மாநில பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழக இளைஞர் கங்கிரஸ் தலைவராக மீண்டும் வெற்றி பெற்ற யுவராஜ், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆதரவாளர் ஆவார். இதில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் சார்பில் நிறுத்தப்பட்டவர் விஜய் இளஞ்செழியன்.
கார்த்திக் சிதம்பரத்தின் சொந்த தொகுதி உள்ள சிவகங்கை மாவட்டத்தில் 836 பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தார்களாம். ஆனால் இதில் 766 பேர் தான் வாக்களித்து உள்ளனர். அதிலும் யுவராஜூக்கு 355 வாக்குகள் கிடைத்துள்ளது.
ஆனால் விஜய் இளஞ்செழியனுக்கு அவர்களில் வெறும் 166 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளதாம். இதை அறிந்து மனவேதனை அடைந்த கார்த்திக் சிதம்பரம், சம்பந்தப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து திட்டி தீர்த்துவிட்டாராம். வெளியே வந்தவர்கள் எங்க கடமையை தானே செய்தோம். அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா என்று சட்டை காலாரை தூக்கிவிட்டு கொண்டார்களாம்.












Click it and Unblock the Notifications