''கூடங்குளம் மாதா கோவிலில் சிறுநீர் கழித்தும், வீடு புகுந்து திருடியும் அட்டூழியம் செய்த போலீஸார்''
சென்னை: கூடங்குளத்தில் நடந்த கலவரத்தின்போது வீடு புகுந்து போலீஸார் திருட்டில் ஈடுபட்டனர். விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்து பெண்களை நாக்கூசும் வகையில் பேசுகின்றனர். இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூடங்குளத்தின் தற்போதைய நிலையை நேரில் கண்டு வந்துள்ள 34 பேர் கொண்ட வக்கீல்கள் குழு கூறியுள்ளது.

முற்றுகைப் போராட்ட கலவரம்
கூடங்குளத்தில் செப்டம்பர் 10ம் தேதி அணு உலை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கிராம மக்களைக் கலைத்தனர்.

4 கிராமங்களில் ஆய்வு
கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து கூடங்குளம், இடிந்தகரை, சுனாமி குடியிருப்பு, வைராவி கிணணு ஆகிய கிராமங்களில் ஏற்பட்ட பதட்ட நிலையையடுத்து தற்போது உள்ள நிலவரம் குறித்து சமநீதி வழக்கறிஞர்கள் சார்பில் 34 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது.

ஆண்களையே காணோம்
இந்த சுற்றுப்பயணம் குறித்து வக்கீல்கள் கூறியதாவது...
நாங்கள் அந்த மக்களை நேரில் சந்தித்தபோது, அங்கு நடந்த சம்பவத்தையும் மனக்குமுறல்களையும் கொட்டித் தீர்த்தனர். ஊருக்குள் நுழைந்தால் ஆண்களை அதிகமாக பார்க்க முடியவில்லை. வீடு, வீடாக சென்று வீட்டில் உள்ள ஆண்கள் எங்கே என்று போலீசார் மிரட்டுவதாக கூறுகின்றனர்.

மாதா கோவில் சிலை உடைப்பு, சிறுநீர் கழிப்பு
இடிந்தகரை கிறித்துவ தேவலாயத்திற்குள் போலீசார் புகுந்து மாதா உருவச்சிலையினை உடைத்தும் சிறுநீர் கழித்தும் அழிம்பு செய்து, அந்த மக்களின் மனதை புண்படுத்தியுள்ளனர்.

144 தடையால் வாழ்க்கையே போச்சு
இடைவெளியின்றி பல நாட்களாக தொடரும் 144 தடை உத்தரவால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தரப்பிலிருந்து எந்த எதிர் நடவடிக்கையும் இல்லாத நிலையினைக் கருத்திற்கொண்டு உடனடியாக 144 தடை உத்திரவை நீக்க வேண்டும்.

வைத்தியம் பார்க்கக் கூட போக முடியவில்லை
கலவத்தின்போது கண்ணீர் புகைகுண்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மருத்துவ வசதி செய்வதற்கு கூட வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இந்த நிலைமையை உடனே சீர் செய்ய வேண்டும்.

நாக்கூசும் வார்த்தைகளால் பேசும் போலீஸ்
இரவு பகல் பாராமல், ரோந்து என்ற பெயரில் காவல்துறையினர் வீடுகளுக்குள் புகுவதையும் பெண்களை நாக்கூசும் வார்த்தைகளால் பேசுவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

வீடு புகுந்து திருடினர்
வீடு புகுந்து தாக்குதல் மற்றும் திருட்டு செயல்களில் ஈடுபட்ட ஆண், பெண் காவலர்கள் அனைவர் மீதும் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றவாளிகளை டிரான்ஸ்பர் செய்யுங்கள்
போராட்டத்தில் கலந்துகொள்ளாத அப்பாவி மக்களையும் கைது செய்துள்ளனர். அவர்களை சிறையில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். ஆகையால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மக்களின் மீதான தாக்குதலுக்கு காரணமான அதிகாரிகளை பணியிட மாறுதலுக்கும் துறை வாரியான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். சேதப்படுத்தப்பட்டுள்ள வீடுகள், வாகனங்களுக்கான இழப்பீடுகளை தாமதமின்றி உரியவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications