தமிழகத்தில் தீவிரமாக பரவும் டெங்கு- மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் இன்று ஆய்வு
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் விரிவான ஆய்வுக் கூட்டம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
சென்னை ஐடிசி சோழா ஹோட்டலில் நடைபெறும் இக் கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், புதுவை ஆகியவற்றைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர்களும், சுகாதாரத் துறை செயலர்களும் பங்கேற்கின்றனர். மத்திய அரசின் சுகாதாரத் துறை செயலர் பி.கே.பிரதானும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
தமிழக அரசு சார்பில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், சுகாதாரத் துறை செயலர் ஜே.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் பொற்கை பாண்டியன், ஊரக மருத்துவப் பணிகள் துறை இயக்குநர் (டிஎம்எஸ்) பரஞ்சோதி, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சி.வம்சதாரா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று இரவு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் சென்னை வந்தார்.