நள்ளிரவு.. கரண்ட் கட்.. கொசுக்கடி.. அதிமுக பேனர்களைக் கிழித்து மக்கள் ஆத்திரம்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் என்ற கிராமத்தில், இரவு 10 மணிக்கு மேல் மின்சாரத்தைப் பிடுங்கி விட்டதால் கடும் கொதிப்படைந்த பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராட்டத்தை நடத்தினர். மின்வாரிய அலுவலகத்தைப் பூட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.அப்படியும் ஆத்திரம் தாங்காமல் அருகில் இருந்த அதிமுக பேனர்களையும் கிழித்துப் போட்டு கோபத்தைக் காட்டினர்.
இந்த இலுப்பூரில்தான் அதிமுக மாவட்டச் செயலாளரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவுமான விஜய பாஸ்கர் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலுப்பூரில் மின்வெட்டு இழுத்துக் கொண்டே போகிறது. இத்தனை மணி நேரம் என்று இருந்த நிலை மாறி இப்போது எப்படா கரண்ட் வரும் என்று மக்கள் புலம்பும் நிலைக்குப் போய் விட்டது. பல மணி நேரத்திற்கு மின்சாரமே வருவதில்லை. இரவு 10 மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது.. அதாவது கரண்ட் கிடையாது.
இதனால் கொதிப்படைந்த பொதுமக்கள் நேற்று இரவு 10 மணிக்கு மேல் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மின்வாரிய அலுவலகத்தை பூட்டிப் போராட்டத்தில் குதித்தனர். அப்படியும் கரண்ட் வரவில்லை. இதனால் அருகில் இருந்த அதிமுக பேனர்களை கிழித்தெறிந்து கோபத்தை வெளிப்படுத்தினர்.
கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை, தூங்க முடியவில்லை, பிள்ளைகள் படிக்க முடியவில்லை என்று கோபத்துடன் பொதுமக்கள் குமுறலோடு தெரிவித்தனர்.
நள்ளிரவில் நடந்த இந்தப் போராட்டத்தால் ஊரே பரபரப்பானது. இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் தடியடி நடத்தி மக்களைக் கலைத்தனர்.