புலிகள் காப்பக பகுதிகளில் இனி டூர் போகலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி

இந்தியாவில் தேசிய விலங்கினமான புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் புலிகள் சரணாலய பகுதியை சுற்றுலா தலமாக பயன்படுத்த கடந்த ஜூலை 24 ம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இவற்றை பாதுகாக்க புதிய விதிமுறைகளை வெளியிடவேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து களக்காடு, முண்டன்துறை புலிகள் காப்பக எல்லையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, காரையார் பாணதீர்த்த அருவி ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், பாபநாசம் மலையில் படகு சவாரி செய்யவும் வனத்துறை தடை விதித்திருந்தது. நாடுமுழுவதும் உள்ள 41 புலிகள் காப்பக பகுதிகளிலும் இந்த தடை அமல்படுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் புலிகள் காப்பக பகுதிகளில் உள்ள சுற்றுலா வசதிகள் படிப்படியாக நீக்கப்படும் என்பது உள்ளிட்ட புதிய விதிமுறைகளை மத்திய அரசு கடந்த 26ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. புதிய விதிமுறைகளை ஒரு வாரத்திற்குள் அரசிதழில் வெளியிட மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி நாடு முழுவதும் உள்ள 41 புலிகள் காப்பகங்களுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு அரசிதழில் திங்களன்று வெளியிட்டது.
மாநில அரசுகள் எதிர்ப்பு
ஆனால் இந்த தடை மூலம் சுற்றுலா வளர்ச்சி பாதிக்கப்படும் என்று சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த தடையை நீக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன.
ஏ.அய் .டி.யு.சி. தொழிற்சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், இந்த தடையால் காப்பக பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி வாழும் வியாபாரிகள், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த தடையை நீக்கவேண்டும். காப்பக பரப்பை விரிவுபடுத்தக்கூடாது என்று அதில் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு ஏ.கே. பட்நாயக், சுவதந்தர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் புலிகள் சராணலயத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டனர். அதன்படி, சுற்றுலா பயணிகள் புலிகள் காப்பகங்களின் 20 சதவீத பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
புலிகள் சரணலாயப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் நெறிமுறைகளை பின்பற்றவேண்டும். சரணாலய பகுதிகளில் புலிகளை காக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புலிகளை காப்பது குறித்து ஆறு மாதங்களில் அதற்கான திட்டங்களை தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு வனப்பகுதிக்குள் சுற்றுலா செல்லும் இயற்கை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications