விஜய்குமாருக்கு பதவி நீட்டிப்புக்கு பரிந்துரைத்த உள்துறை.. நிராகரித்த பிரதமர் அலுவலகம்.. காரணம்?

கேரளத்தைச் சேர்ந்தவரான விஜய்குமார் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாவார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த இவர் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவின் கமாண்டோ படையின் அதிகாரியாக இருந்தார்.
தமிழக அதிரடிப்படைத் தலைவராக இருந்தபோது வீரப்பனை போட்டுத் தள்ளினார்.
ராஜிவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தபோது சோனியா குடும்ப உறுப்பினர்களுக்கும் நெருக்கமானார். இந் நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின் மத்திய கேடருக்குச் சென்றார்.
இப்போதும் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்குத் தலைவராக்கப்பட்டார். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் நக்ஸலைட் வேட்டையை தீவிரப்படுத்தி, பலரைக் காலி செய்தார்.
இந் நிலையில் சில வாரங்களுக்கு முன் விஜய்குமார் ஓய்வு பெற்றார். இதையடுத்து சஷஸ்த்ரா சீமா பல் (Sashastra Seema Bal- SSB) படையின் பொது இயக்குனராக இருந்த பிரனாய் சகாய், ரிசர்வ் போலீஸ் படையின் கூடுதல் இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
இப்போது அவரே இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1975ம் ஆண்டு ஐபிஎஸ் கேடர் அதிகாரியான இவர் ஓய்வு பெறும் வரையிலோ அல்லது வேறு ஆணை பிறப்பிக்கப்படும் வரையிலோ இப்பொறுப்பில் நீடிப்பார் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விஜய்குமாருக்கு மறுக்கப்பட்ட பதவி நீடிப்பு:
முன்னதாக நக்ஸல் வேட்டை தீவிரமாக இருப்பதால் விஜய்குமாருக்கு மேலும் ஓராண்டு காலம் பதவி நீட்டிப்பு வழங்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. இதை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செய்தாரா என்பது தெரியவில்லை.
ஆனால், இந்தப் பரிந்துரையை பிரதமர் அலுவலகம் நிராகரித்துவிட்டது. ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவர் என்பதால், இந்த விவகாரத்தில் திமுக தலையிட்டு பதவி நீட்டிப்பை நிராகரிக்க வைத்திருக்கலாமோ என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்புகின்றனர்.












Click it and Unblock the Notifications