திருச்சி அருகே நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து: 3 பேர் பலி-12 பேர் காயம்
திருச்சி: திருச்சி பொன்னம்பலப்பட்டி என்ற இடத்தில் டோல்கேட்டில் நின்ற லாரியின் மீது வேகமாக சென்ற அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பஸ்சில் பயணித்த நடத்துனர் உட்பட 3 பேர் பலியாகினர். 12 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவையில் இருந்து அரசு பஸ் ஒன்று மதுரைக்கு சென்று கொண்டிருந்தது. மதுரையை சேர்ந்த முனியாண்டி பஸ்சை ஓட்டினார். தாதம்பட்டியை சேர்ந்த சிதம்பரம் நடத்துனராக இருந்தார்.
இன்று அதிகாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னம்பலப்பட்டி என்ற என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது. அங்கு உள்ள டோல்கேட்டில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வேகமாக வந்த பஸ், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியின் மீது மோதியது.
இதில் பஸ்சின் முன்பகுதியில் இடதுபுறம் அமர்ந்திருந்த நடத்துனர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு பஸ் நடத்துனர் சிதம்பரம் மற்றும் கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த ராஜீ(23) ஆகியோர் உயிரிழந்தனர். மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படும் வழியில் குளித்தலையை சேர்ந்த பொன்னுசாமி என்பவரும் இறந்தார்.
விபத்தில் காயமடைந்த அகிலா, மீனாட்சி, வைரமுத்து உட்பட 12 பேர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.












Click it and Unblock the Notifications