இளைய ஆதீனம் பதவியிலிருந்து விலகல்.. இன்று அல்லது நாளை நித்தியானந்தா முடிவை அறிவிப்பாராம்!

என்றைக்கு மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை ஆதீனம் அருணகிரி நாதர் அறிவித்தாரோ அன்றே அவருக்கு நிம்மதி போய் விட்டது. தினசரி ஆயிரக்கணக்கான சர்ச்சைக் கேள்விகளை அவர் சந்திக்க நேரிட்டது. அத்தனைக்கும் பதில் சொல்ல முடியாமல் மடத்துக்குள்ளேயே முடங்கிப் போய் விட்டார் மதுரை ஆதீனம்.
நித்தியானந்தா தொடர்பான சூடான கேள்விகளுக்கும் அவரால் பதிலளிக்க முடியவில்லை. என் இஷ்டம், இதை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற பதிலை மட்டுமே அவரால் தெளிவாகச் சொல்ல முடிந்தது.
இப்போது அருணகிரி நாதரின் பதவிக்கே பேராபத்து வந்து விட்டது. மடாதிபதியாக இருக்கும் தகுதியை மதுரை ஆதீனம் இழந்து விட்டார் என்று இது நாள் வரை அமைதியாக இருந்து வந்த தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை திடீர் வழக்குப் போட்டுள்ளது.
இதனால் பேசாமல் இளைய ஆதீனப் பதவியிலிருந்து விலகி விட்டால் என்ன என்ற முடிவுக்கு நித்தியானந்தா வந்திருப்பதாக கூறப்படுகிறது.
நேற்றே அவர் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று முழுக்க நித்தியானந்தா கப்சிப்பென்று இருந்தார்.
திருவண்ணாமலையில் உள்ள அவரது மடத்திற்கு செய்தியாளர்கள் சிலர் சென்று உள்ளே போய் நித்தியானந்தாவை சந்திக்க முயற்சித்தனர். ஆனால் போக முடியவில்லை. இந்த நிலையில் ஒரு நபர் உள்ளே இருந்து வெளியே வந்து கேட் அருகில் நின்று கொண்டு, செய்தியாளர்களை நித்தியானந்தர் இன்று சந்திக்க வாய்ப்பில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் நித்தியானந்தர் உங்களை சந்திப்பார். மேலும் ஆதீனம் இது குறித்து விளக்கம் அளிப்பார் என்று கூறி விட்டு போய் விட்டார்.
அவரது பெயர் பரமானந்தாவாம். நித்தியானந்தாவின் சீடராம் இவர். இவரது பதில்தான் இப்போதைக்கு நித்தியானந்தா தரப்பின் அதிகாரப்பூர்வ பதிலாக எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
இன்று மதுரை ஆதீன மடத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து நித்தியானந்தா ஏதாவது பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications