நித்தியானந்தா ஆதரவாளர்களால் என் உயிருக்கு ஆபத்து: மதுரை ஆதீனம்

இது தொடர்பாக மதுரை போலீசிலும் அவர் புகார் கொடுத்துள்ளார். மதுரை மாநகரக் காவல்துறை ஆணையருக்கு அருணகிரிநாதர் தனது வழக்கறிஞர் மூலம் நேற்று மாலை ஒரு புகார் மனுவைக் கொடுத்து அனுப்பினார்.
அதில், மதுரை ஆதீனத்தின் வாரிசாக என்னால் நியமிக்கப்பட்ட ஸ்ரீநித்யானந்தாவை, வாரிசு பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிடுகின்றோம். இதனால் நித்தியானந்தா சீடர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் புகாரை உடனடியாக ஏற்று நித்யானந்தரின் நபர்களை மடத்தில் இருந்து வெளியேற்றியும், நித்யானந்தர் மூலம் எனக்கு எந்தவிதமான கேடும் விளைவித்திடாமல் எனது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அருணகிரிநாதர்.
எல்லாம் அவன் செயல்...
மேலும், நித்யானந்தர் நீக்கம் குறித்து பொது அறிவிப்பையும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வெளியிட்டுள்ளார்.
இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், கடந்த ஏப்ரலில் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்தோம். அவரை தற்போது அப்பதவியில் இருந்து நீக்கியுள்ளோம். சைவ மெய்யன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியும், தமிழக அரசு, நீதிமன்றத்தின் விருப்பத்துக்கு இணங்கவும் அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்துள்ளோம்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் மேற்கொண்டு எந்த விவரத்தையும் நான் கூற விரும்பவில்லை. இளையமடாதிபதி நீக்கம் என்பது இறைவனின் அருள். எல்லாம் அவன் செயல்.
நித்யானந்தா தொடர்பு எல்லை அப்பால் இருக்கிறார்...
நித்யானந்தாவிடம் இதைத் தெரிவிக்க, அவரது தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். ஆனால், தொடர்பு கொள்ள முடியவில்லை. நித்யானந்தா எனது சீடராக இருந்துள்ளார். ஆகவே, என்னை மிரட்ட மாட்டார். நித்தியானந்தா நேற்றே தனது இளையமடாதிபதி பதவியை ராஜினாமா செய்வதற்கு தயாராக இருந்தார். ஆனால் வக்கீல்களின் ஆலோசனைப்படி அவர் ராஜினாமா செய்யவில்லை. அதனால் இன்று நான் அவரை பதவி நீக்கம் செய்துவிட்டேன். இந்த முடிவு எனது நிரந்தரமான முடிவாக இருக்கும்.
நித்தியானந்தாவிற்கும் எனக்கும் இனிமேல் நட்பு தொடருமா என்று தெரியவில்லை. இந்த பிரச்சனை குறித்து நேரம் வரும் போது தமிழக முதல்வரை சந்தித்துப் பேசுவேன்.
நித்யானந்தாவின் நீக்கம் இறைவனின் சித்தபடி நடந்துள்ளதால், இது நிரந்தரமானது. வேறு வழியில்லாத நிலையில் அவரை இளைய ஆதீனமாக நியமித்தோம். இப்போதைய சூழ்நிலை காரணமாக அவரை நீக்கியுள்ளோம்.
நித்தியானந்தாவின் நீக்கம் என்பது சூழ்நிலை காரணமாக எடுத்த முடிவே தவிர, எனது விருப்பத்தினால் எடுத்த முடிவு அல்ல என்றார் அருணகிரிநாதர்.












Click it and Unblock the Notifications