நடுங்க வைக்கும் ஊட்டி குளிருக்கு சென்னை பயணி பலி
ஊட்டி: சுற்றுலாவாக ஊட்டிக்கு வந்த சுற்றுலாப் பயணி ஒருவர் ஊட்டியில் நிலவி வரும் கடும் குளிரைத் தாங்க முடியாமல் பரிதாபமாக மரணமடைந்தார்.
சென்னை கொடுங்கையூர் காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். 42 வயதான இவர் நண்பர் பிரசாந்துடன் 19ம் தேதி, ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். அன்று இரவு இருவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர் அறைக்குத் திரும்பினார். ஆனால் மீண்டும் வெளியே போயுள்ளார் புருஷோத்தமன். பின்னர் மீண்டும் அறைக்குத் திரும்பவில்லை.
இதையடுத்து பிரசாந்த் புருஷோத்தமனைத் தேடிப் போனார். அப்போது இன்னொரு ஹோட்டலின் வராண்டாவில் புருஷோத்தமன் படுத்துக் கிடந்ததைப் பார்த்தார். இதையடுத்து அருகில் போய்ப் பார்த்தபோது அவர் இறந்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸுக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், கடும் குளிர் காரணமாக புருஷோத்தமன் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இருப்பினும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே விவரம் தெரிய வரும் என்றனர்.












Click it and Unblock the Notifications