வேலூர் அருகே மலைப்பாதையில் தடம்புரண்டது காவிரி எக்ஸ்பிரஸ்- பெரும் விபத்து தவிர்ப்பு
வேலூர்: கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் வேலூர் அருகே மலைப்பாதையில் தடம் புரண்டு நின்றது. பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
மைசூரில் இருந்து நேற்று இரவு சென்னை நோக்கி காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை 3 மணி அளவில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கொத்தூர் மலைப் பாதையில் ரயில் வந்த போது பெரிய பாறாங்கல் ஒன்று உருண்டு தண்டவாளத்தில் விழுந்து கிடப்பதை ஓட்டுநர் பார்த்துவிட்டார். இதனால் ரயிலின் வேகத்தை சட்டென ஓட்டுநர் குறைத்த போது பாறை மீது ரயில் பெட்டி உரசியது. இதனால் என்ஜினிலிருந்து 5 பெட்டிகள் தடம் புரண்டன. தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய பெட்டிகள் அப்படியே நின்றன. இதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். ஓட்டுநர் வேகத்தைக் குறைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.
விபத்து நடந்த இடம் அருகே 150 அடி பள்ளம் இருக்கிறது. தடம் புரண்ட ரயில் பெட்டிகள் கொஞ்சம் கீழே இறங்கி இருந்தால் பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். மழை பெய்து கொண்டிருந்ததாலும் அதிகாலை நேரம் என்பதாலும் சுமார் 4 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தால் பெங்களூர் எக்ஸ்பிரஸ், லால்பாக் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. மீட்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் 3 மணி நேரம் தாமதமாக ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.












Click it and Unblock the Notifications