மக்களுக்காக 'இரங்கிய' வருணன்... குறைந்து போன 'கரண்ட்' தேவை!

தமிழகத்தை இதுவரை இப்படி ஒரு மின்வெட்டு ஆட்டிப் படைத்ததில்லை. கடந்த இரண்டு வருடங்களாகவே கடுமையான மின்வெட்டில் சிக்கித் தவித்து வருகிறார்கள் மக்கள். தொழில்கள் முடங்கிப் போய் விட்டன. வீட்டில் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை.
அரசும் மின்வெட்டுக்கு என்னென்னவோ காரணங்களைச் சொல்லிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும் மின் பற்றாக்குறையைத் தீர்க்க உருப்படியான நடவடிக்கை எதையும் எடுத்தது போலத் தெரியவில்லை.
தலைநகர் சென்னையில் 2 மணி நேரமும், பிற பகுதிகளில் அதிகபட்சம் 16 மணி நேரமும் மின்தடை மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் நல்ல மழை கொட்டி வருகிறது. வட கிழக்குப் பருவ மழையின் தொடக்கத்தால் இந்த மழை கிடைத்துள்ளது. இது மக்களுக்கு பல்வேறு வழிகளில் உதவியுள்ளது.
பருவ மழை காரணமாக மின்விசிறிகள், ஏசிகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவோர் அதிலிருந்து விடுபட்டு வருகின்றனர். காரணம், குளிர்ச்சியான சீதோஷ்ணம். இதன் காரணமாக மின்சாரத்தின் தேவை குறைந்துள்ளது. இதனால் பல இடங்களில் மின்வாரியமும், மின்தடை நேரத்தை ஓரளவு குறைத்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மின்நுகர்வோர்களுக்கு மின்சாரத்தின் தேவையும் குறைந்துள்ளது.
குறிப்பாக மழை காலமாக இருப்பதால் வீடுகளில் அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் ஏசி போன்ற மின் சாதன கருவிகள் மற்றும் மின்விசிறிகள் பயன்பாடுகள் குறைந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் 8 முதல் 10 மணிநேரம் வரை மின்வெட்டு செய்யப்பட்டு வந்த நிலை மாறி தற்போது 4 மணிநேரம் மட்டுமே மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால் மின்சாரத்தின் தேவை குறைந்து வருகிறது.
மழையும் பெய்து வருவதால் காற்றாலை மூலமும் நேற்று 250 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது. இதனால் வீடுகளுக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டு வந்த நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலை இந்த வாரம் முழுவதும் அமலில் இருக்கும் என்று கூறுவதில் பெருமிதம் கொள்கிறோம். தொடர்ந்து பொதுமக்களுக்கு தங்குதடையின்றி மின்சாரம் வழங்கவே ஆசைப்படுகிறோம் என்றனர்.
அதுக்காக வருஷம் பூராவும் மழை பெய்யட்டும், காற்று வீசட்டும் என்று காத்திருக்க முடிவு செய்து விடாதீர்கள் புண்ணியவான்களே...!












Click it and Unblock the Notifications