ஜெ. கடிதம் பற்றி மத்திய அரசு விரைவில் பரிசீலிக்கும்: அமைச்சர் கே.சி.வேணுகோபால்

இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடுமையான மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதை மத்திய அரசு அறிந்து உள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதமும் வந்து உள்ளது. எனவே தமிழ்நாட்டில் தற்போது நிலவும் கடுமையான மின்வெட்டை கருத்தில் கொண்டு மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் முதல்-அமைச்சரின் கடிதத்தை அவசரமாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் மத்திய தொகுப்புக்கு அனுப்பப்படும். அதன்பிறகு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அரசு கூடி ஆலோசித்து தமிழகத்துக்கு எவ்வளவு ஒதுக்குவது? மற்ற மாநிலங்களுக்கு எவ்வளவு ஒதுக்குவது என்பது பற்றி முடிவு செய்யும். மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு அனுப்பப்படும் மின்சாரம் வரும் வழியில் கணிசமான சேதாரம் ஏற்படுவதை மத்திய அரசு அறிந்து உள்ளது. இதற்காக மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு ராய்ப்பூர் வழியாக மின்சாரம் அனுப்ப மத்திய அரசு திட்டம் தீட்டி, அதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி வருகிற 2014-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் முடிந்து விடும் என்றும், அதன்பிறகு நிலைமை சீராகும் என்றும் நம்புகிறோம். மேலும் வல்லூர், மேட்டூர் மின் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும் போது தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை குறையும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications