சென்னைக்கு ஓடிவந்த கர்நாடக சிறுமிகள்-பசி தாங்காமல் பிச்சை எடுத்த பரிதாபம்-பெற்றோரிடம் ஒப்படைப்பு
சென்னை: பள்ளி விடுதியில் வார்டன் திட்டியதால் அதிருப்தியடைந்த கர்நாடகாவை சேர்ந்த 2 பள்ளி மாணவிகள், சென்னைக்கு ஓடி வந்தனர். ஆனால் இங்கு சாப்பிட்டிற்கு வழியில்லாமல் தவித்த இருவரும் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. போலீசார் இருவரையும் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியை சேர்ந்தவர் சுவேதா, புவனேஸ்வரி. அதேபகுதியில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் தங்கி 8ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டில் யாரிடமும் தகவல் தெரிவிக்காமல், இருவரும் கடந்த 23ம் தேதி சென்னைக்கு ஓடி வந்துவிட்டனர்.
சென்னை கோயம்பேடு பகுதியில் சுற்றி திரிந்தனர். இதில் இருவரும் கொண்டு வந்த பணம் காலியானது. மேற்கொண்டு சாப்பிட்டிற்கு வழியில்லாமல் தவித்த இருவரும், கோயம்பேடு சிவன் கோவில் பகுதியில் பிச்சை எடுத்தனர். சிறுமிகள் நல்ல உடை அணிந்த நிலையில் பிச்சை எடுப்பதை கண்ட அப்பகுதியினர் சாப்பாடு கொடுத்து விசாரித்தனர்.
இதில் இருவரும் கோலாரில் இருந்து ஓடிவந்தது தெரியவந்தது. இதையடுத்து இரு மாணவிகளும் கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கோயம்பேடு போலீஸ் நிலையத்தை ஆய்வு செய்த போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அந்த மாணவிகளிடம் விசாரித்தார்.
இதில் மாணவிகள் தங்கியிருந்த விடுதியின் வார்டன் திட்டியதால் அதிருப்தி அடைந்த இருவரும், அங்கிருந்து தப்பியோடி வந்ததாக தெரிவித்தனர். அதன்பிறகு இருவரின் பெற்றோரும், சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். கமிஷனர் ஜார்ஜ் முன்னிலையில் மாணவிகள் இருவரும், அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications