திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது: திருமண விழாவில் கருணாநிதி பேச்சு!

திமுக தலைவர் கருணாநிதியின் முன்னாள் உதவியாளர் திருமங்கலம் கோபாலின் மகள் ரம்யாவுக்கும், திருச்சானூர் அரும்புரி சாம்பவசிவய்யா-அல்புரி லட்சுமிதேவி தம்பதியரின் மகன் அல்புரி கார்த்திகேய சிவபிரசாத் ஆகியோரின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண நிகழ்ச்சியில் கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். கி.வீரமணி, ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், ரஹ்மான் கான், எ.வ.வேலு ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினர்.
திருமண விழாவிற்கு தலைமை தாங்கிய திமுக தலைவர் கருணாநிதி கூறியதாவது,
இந்த இயக்கம் பல்வேறு தோல்விகளை எதிர்கொண்ட போதும், பல புயல், பூகம்பங்களை சந்தித்த போதும், கம்பீரமாக எழுந்து நிற்க காரணம் நானோ, எனது தலைமையோ பல்வேறு பொறுப்பு வகிக்கும் முன்னோர்களோ அல்ல. திருமங்கலம் கோபால் போன்ற கொள்கை வீரர்கள் ஆற்றிவரும் தனித் தொண்டு தான்.
அவர் எனக்கு பக்கபலமாக இருந்தது மட்டுமல்ல எனது குடும்பத்தையும், குடும்பம் போன்ற கழகத்தையும் கட்டி காப்பாற்ற துணை நின்றதை எண்ணி பார்க்கிறேன். எனது உடலின் ஒரு பகுதியாக உயிரின் ஒரு பகுதியாக மூச்சோடு மூச்சாக கலந்த தொண்டராக அவர் விளங்கினார். அவர் மீது எனக்கு பரிவும், பாசமும் உண்டு. ஏன் பக்தி கூட உண்டு.
அவரை போன்ற தொண்டர்கள் இருக்கும் வரை ஒரு இயக்கத்திற்கோ, இயக்கத்தின் தலைமைக்கோ எந்த தீங்கும் வராது. தீங்கு நெருங்கினால் அதை விரட்டியடிக்கும் ஆற்றல் தொண்டர்களுக்கு உண்டு.
ஆரியத்தின் ஆணி வேர் இந்த மண்ணில் ஊன்றுவதற்கு முன்பு சதியாக யாரும் பிரிக்கப்பட இல்லை. அனைவரும் தமிழர்களாக இருந்தார்கள். திராவிட சமுதாயம் என்று தான் அழைக்கப்பட்டது. மீண்டும் திராவிட சமுதாயம் எழுச்சி பெற திராவிட இயக்கத்தை பெரியாரும், திராவிட முன்னேற்ற கழகத்தை அண்ணாவும் துவங்கினர். எனவே உறுதி கொண்ட தொண்டர்கள் இருக்கும் வரை திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்தவோ, அழிக்கவோ முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications