வறுமையில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை-2 பேர் 'சீரியஸ்'
நெல்லை: குடும்ப வறுமையில் சிக்கி தவித்த பாளையங்கோட்டை சேர்ந்த தச்சு தொழிலாளரின் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். இதில் 5 பேர் பலியாகினர். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர்(40). தச்சு தொழிலாளர். இவரது மனைவி மாரியம்மாள்(35). இவர்களுக்கு மணிகண்டன், மகாதேவன், மகாராஜன் என்ற 3 மகன்களும், மகாலட்சுமி, மலர்வனம் என்ற 2 மகள்களும் இருந்தனர்.
தச்சு தொழிலாளராக ரவிசங்கரின் வருமானம், குடும்பத்தை நடத்தி செல்ல போதுமானதாக இருக்கவில்லை. இதனால் குடும்பத்தினர் கடும் வறுமையில் வாடினர். இந்த நிலையில் நேற்று பாளையங்கோட்டையில் உள்ள ரவிசங்கரின் குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று மொட்டை போட்டனர்.
இந்த நிலையில் இன்று காலையில் ரவிசங்கரின் வீடு வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. இதில் சந்தேகமடைந்த அப்பகுதியினர், வீட்டு கதவை தட்டினர். ஆனால் யாரும் திறக்கவில்லை. இதையடுத்து வீட்டு ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது ரவிசங்கரின் குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அனைவரையும் மீட்டனர். ஆனால் அதற்குள் ரவிசங்கரின் மனைவி மாரியம்மாள், பிள்ளைகள் மகாலட்சுமி, மகாராஜன், மகாதேவன், மலர்வனம் ஆகிய 5 பேரும் இறந்திருந்தனர்.
ரவிசங்கரும், அவரது மகன் மணிகண்டனும் மட்டுமே மயக்க நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இருவரையும் மீட்ட போலீசார், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவ பரிசோதனையில் ரவிசங்கர் குடும்பத்துடன் சயனைடு தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடிதம் சிக்கியது:
ரவிசங்கர் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்ளும் முன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், எங்களது இரண்டரை வயது மகள் மலர்வனம் மூளை வளர்ச்சி குன்றியவர். அவருக்கு பல இடங்களில் சிகிச்சை செய்தும் பலனில்லை. இதனால் மனவேதனையில் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.