நாளை பக்ரீத்.. குர்பானி ஆடுகள் ரூ. 7 கோடிக்கு விற்பனை!
திருப்பூர்: தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் நாளை கொண்டாடபடுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமிய பெருமக்கள் ஈத்கா திடல் அல்லது மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தி பின்னர் ஏழை எளியவர்களுக்கு குர்பானி கொடுத்து மகிழ்வர்.

ஹஜ் யாத்திரையின் நிறைவு நாள்
புனித ஹஜ் யாத்திரையின் நிறைவு நாளை ஹஜ் பெருநாள் என்றும், பக்ரீத் பண்டிகை என்றும் இஸ்லாமியர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர் இறை தூதர் இப்ராஹீம் அவர்களின் புனிதமும் அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த வாழ்வை எண்ணி, தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நல்லதொரு நாள்.

குர்பானி கொடுப்பது ஏன்?
குர்பானி கொடுப்பது ஓர் உன்னதமான வணக்க வழிபாடு. குர்பானிக்காக விலங்குகளை பலியிடும்போது, அதன் ரத்தச்சொட்டு பூமியில் விழுவதற்கு முன்னதாக அல்லாஹ் இடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகிறது. எனவே மனம் திறந்து குர்பானி கொடுங்கள் என்று நபிகள் நாயகம் ( ஸல்) கூறியுள்ளார். எனவேதான் தியாகத் திருநாளில் இஸ்லாமியர்கள் குர்பானி எனப்படும் வழிபாடு செய்கின்றனர். ஆடு, மாடு, ஒட்டகம் என தங்கள் வசதிக்கு தகுந்தவாறு பலியிட்டு அவற்றை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கின்றனர்.

கூட்டுக் குர்பானி வழக்கம்
குர்பானி கொடுப்பதற்காக இஸ்லாமியர்கள் பெரும்பாலும் ஒரு நபருக்கு குர்பானி கொடுப்பதற்கு தகுதியான ஆடு, கிடாய்களையும் மற்றும் 7 பேர் கூட்டாக சேர்ந்து குர்பானி கொடுப்பதற்கு மாடு போன்றவற்றையும் அருகிலுள்ள சந்தைகளில் வாங்கி வருகின்றனர். மேலும் சிலர் இதற்காகவே பிரத்யேகமாக சிறு குட்டியாகவே வாங்கி தங்கள் சொந்த பராமரிப்பில் வளர்த்து வந்து குர்பானி கொடுக்கின்றனர்.

7 கோடிக்கு ஆடு விற்பனை
பக்ரீத் பண்டிகை என்றாலே உளுந்தூர்பேட்டை ஆட்டுச்சந்தை களைகட்டும். உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் கூடும் ஆட்டு சந்தையில் விற்பனை சுறுசுறுப்பாக நடந்தது.

ஆட்டுச் சந்தையில் பெரும் கூட்டம்
வரும் 27ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் இந்த வாரம் ஆடு விற்பனையாளர்கள் மற்றும் வாங்குவோர் அதிகளவில் சந்தைக்கு வந்திருந்தனர். இந்த வாரம் நடந்த சந்தையில் 40,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. சுமார் 7 கோடி ரூபாய் வியாபாரம் நடந்ததாக ஆடு விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

காட்சிப் பொருளான ஒட்டகம்
மதுரை, திண்டுக்கல், பெரியகுளம் போன்ற நகரங்களில் ராஜஸ்தான் போன்ற வெளிமாநிலங்களிலிருந்து ஒட்டகங்கள் வாங்கி வந்து குர்பானி கொடுப்பது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு முதன் முறையாக நத்தத்தில் கூட்டுக்குர்பானிக்காக ஒட்டகம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications