காவல்துறை பணி என்பது ஒரு தேங்லெஸ் ஜாப்: முதல்வர் ஜெயலலிதா

போலீசாருக்கான வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
உயரிய குறிக்கோளுடன் போலீசார்
எந்த ஒரு குறிக்கோளினை அடைவதற்கும் லட்சியம் மிகவும் அவசியம். வாழ்க்கையில் லட்சியம் கொண்டிருப்பவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஓர் ஊரில் ஓர் ஆசிரமம். அந்த ஆசிரமத்தை சுற்றி ஏராளமான செடி, கொடிகளும், மாமரங்களும் இருந்தன. அந்த ஆசிரமத்தைக் கடந்து சென்றால் அங்கே ஒரு பள்ளிக்கூடம். ஆசிரமத்தின் வழியாகத் தான் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வார்கள். காலையில் மாணவர்கள் அந்த வழியாக பள்ளிக்குச் செல்வதையும்; மாலையில் வீடு திரும்புவதையும் ஒரு பெரியவர் கவனித்துக் கொண்டிருந்தார். அந்தப் பெரியவருக்கு ஓர் ஆச்சரியம்! மாணவர்கள் காலையில் அந்த வழியாகப் போகிற போது அங்கே இருக்கும் மாமரங்களைத் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை.
ஒழுங்காகப் போவார்கள். ஆனால், மாலையில் திரும்புகிற போது அப்படி இல்லை. அவர்களுடைய குணம் முற்றிலும் மாறிவிடும். ஆளுக்கொரு கல்லைக் கையில் எடுத்துக் கொள்வார்கள். மாம்பழங்களை குறி வைத்து கற்களை எறிவார்கள். பழங்கள் கீழே விழுந்ததும் அதை எடுத்துக் கொள்வார்கள். ஒரே ஆட்டமும், பாட்டமுமாக இருக்கும்.
காலையில் ஒழுங்காகப் பள்ளிக்குப் போகும் மாணவர்கள் மாலையில் மட்டும் ஏன் இப்படி குறும்பு செய்கிறார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தார் அந்தப் பெரியவர். ஒரு நாள் ஒரு மாணவனைக் கூப்பிட்டார். அந்த மாணவனிடம் தம்பி, காலையில் ஒழுங்காக அமைதியாகப் போகிறீர்கள். மாலையில் மட்டும் இப்படிக்கல் எறிந்து குறும்பு செய்கிறீர்களே? ஏன்? என்று கேட்டார் அந்தப் பெரியவர். அதற்கு அந்தச் சிறுவன், காலையிலே நாங்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். பாடங்களை படிக்க வேண்டும்.
ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். இல்லையென்றால், ஆசிரியரிடம் திட்டு வாங்க வேண்டும், உதை வாங்க வேண்டும். ஆனால், மாலையில் அப்படி இல்லை. வீட்டுக்கு எப்பொழுது வேண்டும் என்றாலும் செல்லலாம். அதனால் தான் குறும்புகள் செய்கிறோம் என்றான்.
இதைக் கேட்ட பிறகு தான் அந்தப் பெரியவருக்கு ஓர் உண்மை தெரிய வந்தது. இந்த மாணவர்கள் காலையில் இந்த வழியாகப் போகிற போது, ஒரு குறிக்கோளுடன் செல்கிறார்கள். அதனால் எந்தக் குறும்பும் செய்வதில்லை. ஆனால், மாலையில் திரும்புகிற போது அந்தக் குறிக்கோள் இல்லாததன் காரணமாக அவர்கள் குறும்பு செய்கிறார்கள் என்பது புரிந்தது. காலையில் குறிக்கோளுடன் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் போல, அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அனைத்து நேரங்களிலும் பணியாற்றுபவர்கள் நம்முடைய காவல் துறையினர். ஒரு மாநிலத்தின் காவல் துறை உயர்ந்த குறிக்கோளுடன் செவ்வனே பணியாற்றுவது என்பது அந்த நாட்டை ஆளும் தலைவரின் தலைமைப் பண்பைப் பொருத்தே அமையும். எனவே தான், தமிழகக் காவல் துறையினர் தற்போது உயர்ந்த குறிக்கோளுடன் செயல்பட்டு வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் அனை வருக்குமே 24 மணி நேரப் பணி என்பது பொருந்தும் என்றாலும், வழக்கமாக அலுவலக நேரத்திலேயே அவர்களுடைய பணிகளை அவர்களால் முடிக்க இயலும். மேலும், ஒரு சில மேம்பாட்டுப் பணிகளை, நிவாரணப் பணிகளை அவர்கள் செய்தால் அதற்குரிய பாராட்டு அரசு ஊழியருக்கு கிடைக்கிறது.
உதாரணமாக, வறுமையில் வாடும் முதியோருக்கு, குடும்ப ஓய்வூதியத்தை ஓர் அரசு ஊழியர் பெற்றுத் தருகிறார் என்றால் அதற்கான பாராட்டு அவருக்கு கிடைக்கிறது. அந்தப் பலனைப் பெற்றவர் நன்றி தெரிவிக்கிறார். இதன் காரணமாக பணியில் திருப்தி ஏற்படுகிறது. பலன் பெற்றவரும் மகிழ்ச்சியடைகிறார். பலன் பெற்றுத்தர காரணமாக இருந்தவரும் மகிழ்ச்சியடைகிறார்.
வசையும் பாராட்டும் பெறும் காவல்துறை
ஆனால், காவல் துறையினரின் நிலை இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. காவல் துறையினரைப் பொறுத்த வரையில் குறிப்பிட்ட மணி நேரப் பணி என்பது எட்டாக் கனியாகவே விளங்குகிறது. சட்டம் ஒழுங்கினைக் காக்கும் பொருட்டும், குற்றவாளிகளை தேடும் பொருட்டும் பணி நிமித்த மாக பல நாட்களில் தங்கள் குடும்பங்களை விட்டு வெளியூருக்கு செல்லக் கூடிய நிலைமை காவல் துறையினருக்கு ஏற்படுகிறது. சில சமயங்களில் குடும் பத்தை நினைத்துப் பார்க்கக் கூட முடியாத சூழ்நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது.
காவல் துறையினரால் பயனடைந்தவர் காவல் துறையின் பணியினை பாராட்டினால், அதனால் பாதிக்கப்படுபவர் வசை பாடுகிறார். எடுத்துக் காட்டாக, நில அபகரிப்பு வழக்கில், நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை உரிமையாளரிடம் மீட்டுக் கொடுத்தால், நிலத்தின் உரிமையாளர் காவல் துறையை பாராட்டுகிறார். அதே சமயத்தில், நிலத்தை அபகரித்தவர், காவல் துறை பொய் வழக்கு போட்டுவிட்டதாக காவல் துறையை சாடுகிறார். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நன்றி பாராட்டப்படாத பணியாக, அதாவது தேங்லெஸ் ஜாப்-ஆக காவல் துறை பணி விளங்குகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications