சிவகங்கையில் பாஜகவினர் மீது தாக்குதல்: பொன்.ராதாகிருஷ்ணன் கன்டனம்!
சென்னை: இளையான்குடியில் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாஜக மருத்துவ பிரிவின் மாநில செயலாளர் டாக்டர் அரவிந்த்ரெட்டி படுகொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், பயங்கரவாதம் தலைதூக்க அனுமதிக்க கூடாது என்றும் பேசினார். ஆர்ப்பாட்டம் முடிவடையும் போது அங்கு திரண்டு வந்த 300க்கும் மேற்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவின் துணைத் தலைவர் எச்.ராஜாவையும், கட்சியின் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஆயுதங்களோடும், கல்வீசியும் கடுமையாக தாக்கி உள்ளனர்.
இந்த தாக்குதலில் மாவட்ட தலைவர் பி.எம்.ராஜேந்திரன், மலையேந்திரன், ஜெயபிரகாஷ், வெள்ளத்துரை, சபேசன், நாகராஜ், சாந்தி உள்ளிட்ட பலர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனநாயக முறையில் கருத்துக்களை வெளிப்படுத்துவதை பொறுத்து கொள்ள முடியாத அளவுக்கு ஒரு கூட்டம் ஆயுதத்தை கையில் எடுப்பது ஜனநாயகத்திற்கு மிகப் பெரும் ஆபத்தாக முடியும்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்வதோடு, பாஜகவின் பொறுப்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications