பாட்டிலுக்கு 10 ரூபா.. Tasmac ஊழலை தடுக்க வந்த புது தளம்.. சென்னை ஐடி ஊழியர் அசத்தல்!
சென்னை: தமிழ்நாட்டின் முதல்வர் விஜய், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் மக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்காக உத்தரவிட்டது மூலம் 717 கடைகள் முழுமையாக மூடப்பட உள்ளது. இந்த அறிவிப்பு வந்த முதல் நாளிலேயே சுமார் 50 கடைகள் மூடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு பாட்டில் மதுபான விற்பனைக்கும் 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பது தொடர்ந்து பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இந்த பிரச்சனையின் தாக்கத்தையும், எந்த பகுதியில் எந்த கடைகளில் மோசடி நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க சென்னை ஐடி ஊழியர் ஒருவர் புதிய தளத்தை உருவாக்கியுள்ளார்.

பாட்டிலுக்கு 10 ரூபா
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் நீண்டகாலமாக நிலவும் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிப்பது தொடர்பான பிரச்சனையை ஆவணப்படுத்தும் வகையில் ஒரு புதிய பொதுமக்கள் புகார் தளத்தை சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர் தொடங்கியுள்ளார். அதாவது மதுபானத்திற்கு MRP விலையை தாண்டி அதிக விலையில் விற்பனை செய்வது டாஸ்மாக் கடைகளில் இயல்பாகிவிட்டது.
இந்த தளம் மக்களிடமிருந்து புகார்களை திரட்டி, மீண்டும் மீண்டும் அதிக தொகையை வசூல் செய்யும் கடைகளை மக்களுக்கும், அரசுக்கும் சுட்டிக்காட்ட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள பொதுமக்களிடையே வரவேற்பு பெற துவங்கியுள்ளது.
நுகர்வோர், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த பிரச்சனையை அவ்வப்போது எழுப்பி வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த புகார்களுக்கு தீர்வு காணப்படாமல் இருந்த நிலையில், இப்போது ஒரு ஐடி நிபுணர் இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் புதிய தொழில்நுட்ப தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும் பாட்டிலுக்கு 10 ரூபா என்பது தவெக தலைவரும், தமிழ்நாட்டு முதல்வருமான விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திய முக்கியமான வாசகம்.
'டாஸ்மாக் ஸ்கேம் வாட்ச்' தளம்
சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியரான தீபக் சிவகுமார் 'டாஸ்மாக் ஸ்கேம் வாட்ச்' என்ற பெயரில் ஒரு பொதுமக்கள் புகார் தளத்தை தொடங்கியுள்ளார். இந்த தளத்தின் முகவரி https://tasmac-scam.vercel.app ஆகும்.
இங்கு மக்கள் தங்கள் மாவட்டம், பகுதி மற்றும் கடை எண் ஆகியவற்றை தேர்வு செய்து அதிக விலை வசூல், பில் இல்லாதது, மதுபான தரம் குறித்த புகார்களை, வெளிப்படைத்தன்மை குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை எளிதாக பதிவு செய்யலாம்.
இந்த தளத்தில் மாவட்ட வாரியாக புகார்களை வரைபடமாகக் காட்டும் டாஸ்போர்டு வசதியும் உள்ளது. தற்போது இந்த டாஸ்போர்டில் உள்ள தகவல்கள் மாதிரி தரவுகளாக (mock data) உள்ளன, ஏனெனில் தளம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு எளிதாக பயன்படுத்தும் வகையில் தமிழ் மொழியில் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார் தீபக். இந்த அம்சங்கள் மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் இந்த தளத்தை எளிதாக பயன்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த தளமும், தளத்தின் தரவுகளும் தமிழ்நாடு அரசுக்கு பாட்டிலுக்கு 10 ரூபா ஊழலை தடுக்க உதவும்.
அரசு மருத்துவமனை புகார்களுக்கும் தனி தளம்
டாஸ்மாக் புகார் தளத்தைத் தொடங்கிய தீபக் சிவகுமார், அரசு மருத்துவமனைகளில் உள்ள புகார்களை ஆவணப்படுத்தும் மற்றொரு பொதுமக்கள் தளத்தையும் உருவாக்கி வருகிறார் (https://uyir-kural.vercel.app/). இந்த தளம் படுக்கை வசதி இல்லாதது, மருந்துகள் கிடைக்காதது, நோய் கண்டறியும் சோதனை வசதிகள் போதாதது உள்ளிட்ட பிரச்சனைகளை பதிவு செய்ய உதவும் வகையில் உருவாக்கி வருகிறார்.
அரசு சுகாதார உள்கட்டமைப்புக்கு பெரும் தொகை செலவிடப்பட்டாலும் இத்தகைய புகார்கள் தொடர்ந்து வருவதை ஆவணப்படுத்தும் நோக்கில் இந்த தளம் உருவாக்கப்படுகிறது.
பொதுமக்களின் பங்கேற்பு முக்கியம்
இந்த புதிய தளங்கள் மூலம் பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக பதிவு செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழகத்தில் நீண்டகாலமாக நிலவும் இந்த புகார்களை ஆவணப்படுத்தி, மக்களுக்கும், அரசுக்கும் வெளிப்படுத்துவது மூலம் மாற்றம் கொண்டுவர முடியும் என்று அவர் கூறியுள்ளார். இந்த முயற்சி தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற துவங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications