தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. யாருக்கெல்லாம் 1 கிராம் தங்கம்? தமிழக அரசு வெளியிட்ட விதிகள்!
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் [Thaaimaaman Thanga Mothira Thittam] தற்பொழுது அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான முறையான அரசாணையை (Government Order) தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற 'வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு' (Vetri Thamizhagam vision document) தமிழக அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்த தொலைநோக்கு ஆவணத்தில் இடம்பெற்றிருந்த மிக முக்கியமான மற்றும் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த உன்னத திட்டத்திற்கு தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ₹755.83 கோடி நிதி ஒதுக்கீடு:
தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையின்படி, இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் தொய்வின்றி செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ₹755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்திற்கான ஒரு கிராம் தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகளை (Tenders) உடனடியாக கோருவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் பிரசவ காலப் பொருளாதாரம் பெருமளவில் சுமையற்றதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போதிருந்து அமல்? யார் யாருக்குப் பயன்?
அரசாணையின்படி, 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறத் தகுதி உடையவர்கள் ஆவர். தமிழகத்தில் நிரந்தரமாக வசித்து, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHC) அல்லது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு இந்த 1 கிராம் தங்க மோதிரம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
தமிழர் பண்பாடும் "தாய்மாமன் சீரும்":
தமிழர் பாரம்பரியத்தில், ஒரு குடும்பத்தில் குழந்தை பிறந்தவுடன் தாயின் சகோதரரான 'தாய்மாமன்' ஓடிவந்து குழந்தையை வரவேற்று, தங்கம் உள்ளிட்ட சீர்வரிசைகளை வழங்கி வாழ்த்துவது மரபாகும். இந்த உன்னதமான கலாச்சார பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையில், தற்பொழுது தமிழக அரசே ஒவ்வொரு குழந்தையின் பிறப்பிற்கும் 'தாய்மாமன்' என்ற உன்னதப் பங்கை ஏற்று, அன்போடும் அக்கறையோடும் குழந்தையை வரவேற்கும் அடையாளமாக இந்த தங்க மோதிரத்தை வழங்க முன்வந்துள்ளது.
மாநிலத்தில் தாய்-சேய் நலக் குறியீடுகளை (Maternal and Child Health Indicators) மேம்படுத்துவதிலும், கர்ப்பிணிப் பெண்களுக்கான PICME (கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு) கண்காணிப்பு முறையை வலுப்படுத்துவதிலும் தமிழக அரசு ஏற்கனவே முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், அரசு சுகாதாரச் சேவைகளின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கவும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பை வாழ்நாள் நினைவாக மாற்றவும் இத்திட்டம் வழிவகை செய்யும்.
செப்டம்பர் 15 அன்று அதிகாரபூர்வ தொடக்கம்:
ஜூன் 22, 2026 முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்திட்டம் பொருந்தும் என்றாலும், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டம் அதிகாரபூர்வமாக மாநில அளவில் துவக்கி வைக்கப்பட்டு, பயனாளிகளுக்கு மோதிரங்கள் நேரடியாக வழங்கப்பட உள்ளன. ஜூன் 22 முதல் செப்டம்பர் இடைப்பட்ட காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கான விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கும் விடுபடாமல் இந்த தங்க மோதிரங்கள் முறைப்படி வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications