லிவ் இன் பார்ட்னருக்காக! தாய், தந்தை, தங்கையை துடிக்க துடிக்க.. இளம்பெண் கொடூரம்! அதிர்ந்த பெங்களூர்
பெங்களூர்: ஆண் நண்பருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த மகளை பெற்றோர் கண்டித்ததால், கோபம் அடைந்த இளம்பெண், பெற்ற தாய் தந்தை மற்றும் தனது சகோதரி என 3 பேரையும் துடிக்க துடிக்க கொடூரமாக கூர்மையான அரிவாள் போன்ற ஆயுதத்தால் கொன்ற கொடூர சம்பவம் பெங்களூரில் அரங்கேறியுள்ளது. 3 பேரையும் கொன்றுவிட்டு ஆண் நண்பருடன் தலைமறைவு ஆன இளம்பெண்ணை பெங்களூர் போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். கைதுக்கு பிறகே கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்பது தெரிய வரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் ஒருவர் தனது லிவ் இன் பார்ட்னர் உடன் இணைந்து, தனது தாய்- தந்தை மற்றும் சகோதரியை வெட்டிக்கொலை செய்து இருக்கிறார். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

முதலில் முத்துலட்சுமியை கொன்றனர்
பெங்களூரின் சீகேஹள்ளி பகுதியில் உள்ள சாய் கிரீன் அடுக்குமாடி குடியிருப்பில் சோமசுந்தர் (வயது 55), அவரது மனைவி முத்துலட்சுமி (48), மற்றும் இளைய மகள் சுப்ரியா (20) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியின் மூத்த மகளான ஷ்வேதா, கென்னத் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். ஷ்வேதாவின் இந்த செயல் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால், பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், ஷ்வேதாவுக்கு சுமார் ரூ.30 லட்சம் வரை கடன் இருந்ததாகவும், அந்த கடன் குறித்து பெற்றோர் அடிக்கடி கேள்வி எழுப்பியதால் குடும்பத்தில் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில்தான் சம்பவத்தன்று, தாய் முத்துலட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வீட்டிற்கு வந்த ஷ்வேதா மற்றும் கென்னத் ஆகிய இருவரும் முத்துலட்சுமியுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். தொடர்ந்து கோபத்தில், கூர்மையான ஆயுதத்தால் முத்துலட்சுமியை தாக்கி கொலை செய்துள்ளனர்.
தங்கை என்றும் பாராமல் துடிக்க துடிக்க..
இந்த கொலையை மறைப்பதற்காக, இருவரும் வீட்டிலிருந்த ரத்தக்கறைகளை கழுவி சுத்தம் செய்து இருக்கிறார்கள். சிறிது நேரத்தில் வீட்டிற்கு தங்கை சுப்ரியா வந்து இருக்கிறார். அவர் அம்மா இங்கே தானே வந்தார் என சொல்ல, இவளையும் உயிரோடு விட்டு வைக்க கூடாது என இருவரும் சேர்ந்து கொலை செய்து இருக்கிறார்கள். உடன் பிறந்த தங்கை என்றும் பாராமல், சுப்ரியாவை ஷ்வேதா பிடித்துக் கொண்டிருக்க, கென்னத் தாக்கி கொலை செய்து இருக்கிறார். இரண்டு கொலைகளை அடுத்தடுத்து நடத்தியும் ஆத்திரம் தீராத ஸ்வேதா மற்றும் கென்னத் , சோமசுந்தரமும் வீட்டிற்கு வரட்டும் என காத்திருந்துள்ளனர்.
சோமசுந்தரத்தையும் தீர்த்து கட்டினர்
அவர் வீட்டிற்கு வந்ததும், அப்பா என்றும் பாராமல் கூர்மையான ஆயுதத்தால் ஆண் நண்பருடன் சேர்ந்து ஸ்வேதா தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சோமசுந்தரம், பலத்த காயங்களுடன் வீட்டிலிருந்து வெளியே ஓடி உதவி கேட்க முயன்றுள்ளார். எனினும், சிறிது நேரத்தில் அவரும் துடிதுடித்து பலியானார். மூன்று கொலைகளை அரங்கேற்றிவிட்டு ஷ்வேதா மற்றும் கென்னத் தலைமறைவாகியுள்ளனர்.
அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா, வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடும்ப பிரச்சனை, காதல் உறவு, கடன் சுமை ஆகியவை இணைந்து மூன்று உயிர்களை பலி வாங்கிய இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications