மே 3 ‘நீட்’ தேர்வு அதிரடி ரத்து.. ராஜஸ்தானில் என்ன நடந்தது? வினாத்தாள் கசிந்தது எப்படி? ஷாக் தகவல்
சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‛நீட்' தேர்வு மே மாதம் 3ம் தேதி நடந்தது. நாடு முழுவதும 22 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். இந்நிலையில் தான் மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, மறுதேர்வு விரைவில் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்தது தான். ராஜஸ்தானில் என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டில் மருத்துவ படிப்புகளை படிக்க ‛நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை சார்பில் இந்த தேர்வு நம் நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட பிற இளநிலை மருத்துவ படிப்புகளை படிக்க விரும்பும் மாணவ-மாணவிகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடந்தது.

அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணி வரை நடந்தது. தமிழ் உள்பட மொத்தம் 13 மொழிகளில் நடைபெற உள்ளது. அதன்படி அசாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, மராத்தி, ஒரியா, தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடந்தது.
மே 3 நீட்தேர்வு ரத்து
இந்நிலையில் தான் கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை இன்று அறிவித்துள்ளது. அதோடு நீட் தேர்வுக்கான மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும். தேதி அறிவித்த பிறகு தனியாக யாரும் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் நீட் தேர்வு எதற்காக ரத்து செய்யப்பட்டது? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதன் பின்னணியில் ராஜஸ்தான் உள்ளது.அங்கு தான் தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்துள்ளது. இது கண்டறியப்பட்ட நிலையில் தான் தற்போது நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் கசிந்த வினாத்தாள்
அதாவது ராஜஸ்தானில் தேர்வுக்கு முன்பாகவே உத்தேச வினாத்தாள் வழங்கப்பட்டது. அதில் மொத்தம் 410 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இதில் வேதியில் பாடத்துக்கான 120 கேள்விகள் அப்படியே நீட் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டு இருந்தது. இது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அதோடு நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
அதாவது உத்தேச வினாக்கள் தொகுப்பு என்ற பெயரில் கைகளால் எழுதப்பட்ட 410 வினாக்கள் கொண்ட ஆவணம் நீட் தேர்வுக்கு 15 முதல் 30 நாள்களுக்கு முன்பாகவே மாணவர்களிடம் பரவியது. தேர்வுக்கு 42 மணி நேரம் முன்பாக வாட்ஸ் - அப் மூலம் ராஜஸ்தான் மற்றும் பிற வட மாநிலங்களில் மின்னல் வேகத்தில் பரவியதாகவும் கூறப்படுகிறது. அதில் உள்ள வினாக்களை மட்டும் படித்திருந்தால் நீட் தேர்வில் 600 மதிப்பெண்களை தாண்டி எடுத்திருக்க முடியும். இதனால் கடும் சர்ச்சை எழுந்தது.
சிபிஐ விசாரணை - 45 பேர் கைது
இதுதொடர்பாக ராஜஸ்தான் சிறப்பு ஆபேரஷன் குழுவின் ஏடிஜிபி விஷால் பண்சால் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ''தேர்வுக்கு சில வாரங்களுக்கு முன்பாக மாவ-மாணவிகளுக்கு 150 பக்கத்தில் 400 கேள்விகளுக்கும் பிடிஎஃப் பைல் அனுப்பப்பட்டது.அதில் இருந்து 120 கேள்விகள் நீட் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ளது'' என்றார். அதோடு மொத்தம் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இதுபற்றி சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதல் முறையல்ல..
நீட் தேர்வு வினாக்கள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுவது இது முதல் முறையல்ல. நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வினாத்தாள் கசிவது, விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் குளறுபடிகள், தேர்வில் ஆள்மாறாட்டம் என ஏதாவது ஒரு முறைகேடு நடப்பது வழக்கமாகி விட்டது. இதனால் தான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினர் கூறி வருவது குறிப்பிடதக்கது.













Click it and Unblock the Notifications