லண்டனில் கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம்!
லண்டன்: கூடங்குளத்தில் அணுஉலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம் நடைபெற்றது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரத்திற்கு முன்பாக கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவாக கவன ஈர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதில் பிரிட்டனில் உள்ள பல்வேறு அமைப்புகள் பங்கு பெற்று தங்களின் அணுஉலை எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த போராட்டத்தை தமிழ் சோலிடாரிட்டி என்ற அமைப்பை வழிநடத்தும் சேனன் தலைமையில் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் சேனன், இங்கிலாந்தில் உண்ணாவிரதம் மேற்கொண்ட பரமேஸ்வரன் மற்றும் பலர் பேசினர். கூடங்குளம் மக்களில் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துக் கூறினர்.
இங்கிலாந்தில் வாழும் மக்கள் மட்டுமல்லாமல் பல தரப்பட்ட மக்களுக்கு போராட்டம் தொடர்பாக விளக்கமும், துண்டுப் பிரசுரமும் போராட்டக்காரர்களால் வழங்கப்பட்டது. இறுதியாக கூடங்குளம் மக்களின் கோரிக்கைகள் வெல்லும் வரை போராட்டம் ஓயாது தொடரும் என்று அறிவித்தனர்.