ஜெயலலிதாவை சந்திக்க மேலும் 5 தேமுதிக (விஜயகாந்த்) எம்.எல்.ஏக்கள் விருப்பம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விரும்புவதாக தேமுதிகவைச் சேர்ந்த மேலும் ஐந்து எம்.எல்.ஏக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான மனுவை கொடுக்க முதல்வரின் தனிச் செயலாளரை அவர்கள் அணுகியபோது அதைப் பெற்றுக் கொள்ள அவர் மறுத்து விட்டார்.
முதல்வர் ஜெயலலிதாவை தேமுதிகவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சுந்தரராஜன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன், நடிகர் அருண் பாண்டியன் ஆகியோர் சமீபத்தில் சந்தித்து அரசைப் புகழ்ந்து பேசி விட்டு வந்தனர்.
இதனால் விஜயகாந்த்தும், தேமுதிகவினரும் கடும் கொதிப்படைந்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக சாடிப் பேசியிருந்தார் விஜயகாந்த். இந்த நிலையில் நேற்று அதிரடியாக அவர் உள்ளிட்ட ஐந்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வரை சந்திக்க விரும்புவதாகவும், தொகுதிப் பிரச்சினைகள் குறித்துப் பேச விரும்புவதாகவும் கூறி சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் இன்று மேலும் ஐந்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வரைச் சந்திக்க மனு கொடுக்க முயன்றனர். வெங்கடேசன், நல்லதம்பி, செங்கம் சுரேஷ், சம்பத், தினகரன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவின் தனிச் செயலாளர் ஆண்டியப்பனை அணுகி விருப்ப மனுவைக் கொடுக்க முயன்றனர். ஆனால் அதைப் பெற்றுக் கொள்ள அவர் மறுத்து விட்டார்.
இதையடுத்து வெளியே வந்த அவர்கள் பதிவுத் தபால் மூலம் இந்த அனுமதி கோரும் கடிதத்தை முதல்வருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications