சட்டசபை வைரவிழாவுக்கு பிரணாப் வருகிறார்: ஜெ.

இதுதொடர்பாக சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கை:
இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி 1952-ஆம் ஆண்டு அமைக்கப்பெற்ற தமிழ்நாடு சட்டசபை இந்த ஆண்டு 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அடுத்து தமிழ்நாடு சட்டசபையின் வைர விழா சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு சட்டமன்ற மண்டபத்தில் 30.11.2012 அன்று, வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
30.11.2012 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டசபையின் வைர விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களை அழைக்கும் பொருட்டு சட்டமன்ற சபாநாயகர், நிதியமைச்சர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர், 26.10.2012 அன்று, டெல்லியில் உள்ள, குடியரசுத் தலைவர் மாளிகையில், அவரை நேரில் சந்தித்து எனது அழைப்புக் கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்தனர்.
எனது அழைப்பினை ஏற்றுக் கொண்டு, 30.11.2012 அன்று நடைபெறவுள்ள, தமிழக சட்டசபையின் வைர விழாவில் கலந்து கொள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் 29.10.2012 தேதியிட்ட கடிதம் மூலம், இசைவு தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டசபையின் வைர விழாவிற்கு தலைமை தாங்குமாறு தமிழ்நாடு ஆளுநர் ரோசைய்யா அவர்களை இன்று ஆளுநர் மாளிகைக்கு சென்று, நேரில் நான் அழைப்பு விடுத்தேன்.
எனது அழைப்பினை ஏற்று, தமிழக ஆளுநர் அவர்களும் இந்த விழாவிற்கு தலைமை தாங்க தனது இசைவினைத் தெரிவித்தார் என்பதை, இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவிலே கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு இந்த மாமன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் தங்கள் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications