பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்- ராமதாஸ்
சென்னை: பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு குறைந்தது 25 சதவீதம் போனஸ் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருநாளையொட்டி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. தீபஒளி திருநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே இது தொடர்பாக அரசுக்கும், தொழிலாளர் சங்கங்களுக்கும் இடையே பேச்சு நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் நடப்பாண்டு தீபாவளி திருநாளுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், போனஸ் குறித்து போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுடன் அரசு இன்று வரை பேச்சு நடத்தவில்லை. மக்களின் அடிப்படைத் தேவைகளான மின்சாரம், போக்குவரத்து, பால், நியாய விலைக்கடை பொருட்கள் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதற்காக பாடுபடும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு குறைந்தது 2 வாரங்களுக்கு முன்பாக போனஸ் வழங்கினால் தான் அவர்கள் தீபாவளி திருநாளுக்காக தங்களது குடும்பங்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்க முடியும்.
ஆனால் தீபாவளி திருநாளுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் போனஸ் தொடர்பான பேச்சுக்களை போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களுடன் அரசு இதுவரை தொடங்கமல் இருப்பது சரியல்ல. போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுடன் போனஸ் பேச்சுக்களை அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.
விலைவாசி பல மடங்கு உயர்ந்திருப்பதால் அதை கருத்தில் கொண்டு இம்முறை அனைத்து பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் குறைந்தது 25 சதவீதமாவது போனஸ் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications