கடன் தொல்லை: மனைவியின் காதில் விஷத்தை ஊற்றிவிட்டு தற்கொலைக்கு முயன்ற வியாபாரி
சேலம்: சேலத்தில் கடன் தொல்லையில் மனமுடைந்த பால் வியாபாரி ஒருவர், தனது மனைவியின் காதில் பூச்சி மருந்தை(விஷம்) ஊற்றிவிட்டு, தானும் அதை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த பெரியேரி என்ற பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ரமேஷ்(29). இவரது மனைவி ராஜேஸ்வரி(24). இவர்களுக்கு பாரத்(7), அனுஷ்கா(3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
ரமேஷ் நடத்தி வந்த பால் வியாபாரத்தில் அதிக நஷ்டம் ஏற்பட்டதால், சுமார் ரூ.3 லட்சம் வரை கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ரமேஷ் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். மேலும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற மனைவியிடம் கூறி வந்துள்ளார். ஆனால் ரமேஷை ஆறுதல்படுத்திய ராஜேஸ்வரி, கடனை கட்டிவிடலாம் என்று தைரியப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று ராஜேஸ்வரி தூங்கி கொண்டிருந்த போது, அவரது காதில் ஏதோ கசிவது போல உணர்ந்து கண் திறந்து பார்த்தார். அப்போது ரமேஷ், அவரது காதில் பூச்சி மருந்தை ஊற்றவதை கண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி, பூச்சி மருந்தை தட்டிவிட்டார்.
இதனால் பூச்சி மருந்து ராஜேஸ்வரியின் கண், முகம் ஆகிய இடங்களில் தெறித்து, பட்ட உடல் பகுதிகள் வீங்கியது. மேலும் சிறிது நேரத்தில் பூச்சி மருந்தை குடித்த ரமேஷூம் மயங்கி விழுந்தார். ராஜேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியினர் ஓடிவந்தனர். இருவரையும் மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications