‘நிலம்’ கரையை கடந்தும் வடியாத வெள்ளம்: விவசாயிகள் பாதிப்பு

நிலம் புயல் ஆடிய கோரத்தாண்டவத்தினால் காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட மாவட்டங்களில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
புயல் கரையை கடந்தும் வெள்ளநீர் வடியாத காரணத்தால் 1 லட்சத்து 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்று அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாய்ந்த வாழை மரங்கள்
வேலூர், திருவண்ணாமலை. கடலூர் மாவட்டங்களில்ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு நாசமடைந்துள்ளன. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் புயலின் தாக்குதலுக்கு 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் சரிந்தன. குலை தள்ளிய மரங்களும் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கீரப்பாளையத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. அதிகாரிகள் விரைவில் கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து துண்டிப்பு
கடலூர் அருகே திருமானிக்குழி பாலத்தின் மீது 2 அடி உயரத்துக்கு மேல் வெள்ளம் பாய்ந்தோடுவதால் திருமானிக்குழி, ஓட்டேரி உள்ளிட்ட 10 கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கிராமங்கள் மட்டுமின்றி, நகரப்பகுதிகளிலும் வெள்ளம் காணப்படுகிறது.
தொடரும் கணக்கெடுப்பு
திருவண்ணாமலை மாவட்டத்திலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வாழைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. 200க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் சரிந்து விழுந்தன. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பகுதியில் 10 ஏக்கர் நடவு பயிர் சேதமடைந்துள்ளது. உப்புவேலூர் குறுவட்டத்திற்குட்பட்ட காரட்டை, கிளாப்பாக்கம் முதல் கொஞ்சு மங்கலம் வரையில் உள்ள 20 கிராமங்களில் சம்பா நடவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும், மழையால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் மற்றும் சேதமடைந்த வீடுகள், மின்கம்பங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
நிலம் புயல் கரை கடந்த பிறகு வலுவிழந்து ஆந்திராவில் மையம் கொண்டுள்ளது. இது அரபிக் கடல் நோக்கி நகர்வதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications