கத்தி முனையில் ஸ்பெயின் நாட்டுப் பெண் கற்பழிப்பு: 7 பேர் கைது, குற்றவாளி வரைபடம் வெளியீடு
மும்பை: மும்பையில் வீட்டில் தனியாக இருந்த ஸ்பெயின் நாட்டுப் பெண்ணை கத்தி முனையில் கற்பழித்துவிட்டு அங்கிருந்த பணம், பொருட்களை திருடிச் சென்ற வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கற்பழித்தவனின் வரைபடத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பவர் 27 வயதான் ஸ்பெயின் நாட்டு பெண். அவர் கடந்த 5 முதல் 6 மாதங்களாக அங்கு தங்கி இசை கற்று வருகிறார். அவருடன் வெளிநாட்டுப் பெண் ஒருவரும் தங்கியுள்ளார். நேற்று அதிகாலை அந்த ஸ்பெயின் நாட்டுப் பெண் வீட்டில் தனியாக இருக்கையில் திருடன் ஒருவன் கம்பியில்லாமல் திறந்திருந்த ஜன்னல் வழியே உள்ளே நுழைந்து அவரை 2 முறை கற்பழித்தான். பின்னர் வீட்டில் இருந்த ரூ.35,000 மதிப்புள்ள பொருட்களுடன் தப்பியோடிவிட்டான்.
அந்த பெண்ணுடன் இருந்தவர் ஏதோ வேலை காரணமாக வேறு மாநிலத்திற்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் பலரைப் பிடித்து விசாரித்து இதுவரை 7 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அந்த பெண் கூறிய அடையாளங்களை வைத்து குற்றவாளியின் வரைபடத்தை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக போலீசார் கூறுகையில், 3வது மாடியில் உள்ள தனது வீட்டுக்குள் ஜன்னல் வழியாக திருடன் வந்தான் என்றும், அவன் தன் கழுத்தில் கத்தியை வைத்து கற்பழித்தான் என்றும், அதன் பிறகு வீட்டில் ஏதாவது விலை உயர்ந்த பொருட்கள் இருக்கிறதா என்று தேடினான் என்றும் தெரிவித்துள்ளார்.
திருடன் வந்ததும் அந்த பெண் கதவைத் திறந்து கொண்டு ஓடி பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டியுள்ளார். ஆனால் அங்கு யாருமில்லை. அதற்குள் அங்கு வந்த திருடன் அவரை உள்ளே இழுத்து வந்து கற்பழித்துள்ளான். அதன் பிறகு அந்த பெண் கழிப்பறைக்கு செல்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு கதறியுள்ளார். அப்போது அந்த வழியாக தெருவில் சென்று கொண்டிருந்த ஒரு பெண் இவரின் அலறலைக் கேட்டு போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வருவதற்குள் குற்றவாளி தப்பியோடிவிட்டான்.
கற்பழிக்கப்பட்ட பெண் ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்று முதலில் தகவல் வெளியானது. அதன் பிறகு அவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications