தீபாவளி கூட்டத்தில் 'கைவரிசை' காட்ட திருடர்கள் ரெடி.. பிடித்துப் போட போலீஸும் தயார்!
சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட உள்ள திருடர்கள் பிடிக்க, சென்னை போலீசார் உஷார் நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அலைமோதும் தீபாவளிக்கூட்டம்
தீபாவளி பண்டிக்கை நெருங்கியுள்ள நிலையில், பொருட்களை வாங்க மக்கள் சென்னை மக்கள் அலை போல திரண்டு வருகின்றனர். சென்னை நகரின் முக்கிய வியாபார பகுதிகளான தி.நகர், பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில், மக்கள் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது.
தி.நகர்
திருடர்களிடமிருந்து மக்களைக் காக்க, தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் போலீசார் கூட்ட நெரிசலின் இடையே மாறுவேடத்திலும், போலீஸ் உடையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்கள் அதிக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
புரசைவாக்கம்
புரசைவாக்கத்தில் டவுட்டன் பாலம் அருகே உள்ள சந்திப்பில் தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்களின் மூலம் ஆய்வு நடத்தி வருகின்றனர். பொது மக்களுக்கு நடந்து செல்ல வசதியாக சாலையோரத்தில் கயிறு கட்டி பாதை அமைத்துள்ளனர்.
பாரிமுனை
பாரிமுனையில் உள்ள என்.எஸ்.சி போஸ் சாலையில் பொருட்களை வாங்க மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதனால் பொது மக்கள் இடையே நுழையும் திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணி்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பூக்கடை பகுதியில் இந்த முறை பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தீவுத்திடல்
இந்த முறை தீவுத்திடலில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் தீயணைப்பு வாகனங்கள் எப்போதும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தவிர்க்கும் வகையில், கூட்ட நெரிசலில் மக்கள் ஜாக்கிரதையாக செயல்படுமாறு போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.