திருப்பாசேத்தி எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கில் 6 பள்ளி மாணவர்கள் கைது!

திருப்பசேத்தி சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் கடந்த 27ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையாளியை கண்டுபிடிக்க டி.எஸ்.பி மங்களேஸ்வரன் தலைமையில் 10 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் தனிப்படை போலீசார் ஏற்கனவே 7 பேரை கைது செய்தனர். இந் நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் வேம்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல்(16), சிங்கமுத்து(17), முத்துப்பாண்டி(16), ராஜகுரு(19), ஜோதிபாசு(17), விஜய்(17) ஆகிய 6 பள்ளி மாணவர்களை கைது செய்துள்ளனர்.
மேலும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த விழுப்புரம் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வண்ணாங்காடு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (22), அரியலூர் மாவட்டம் நாகபந்தலை சேர்ந்த மதியழகன்(25) ஆகியோரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் மானாமதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துப்பட்டு, பின்னர் இவர்களில் 5 மாணவர்கள் மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், மூன்று மாணவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முக்கிய குற்றவாளியான பிரபுவை தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
துப்பாக்கி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதா?
வழக்கமாக ஜாதித் தலைவர்களின் விழா கொண்டாடப்படும் சமயங்களில், இன ரீதியிலான மோதல்கள் வெடிப்பதுண்டு. இதனால் காவல்துறை மிக கவனமாக உஷார் நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால் இந்த முறை வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துகொண்டு அரசே, காவல்துறையின் கைகளைக் கட்டிவைத்துவிட்டது என்றும் புகார் உள்ளது.
மதுரையிலும் ராமநாதபுரத்திலும் காவல்துறை கூட்டங்களைக் கூட்டிய தென்மண்டல ஐ.ஜியாக இருந்த ராஜேஷ் தாஸ், இம்மானுவேல் சேகரன் குருபூஜையின் போது பரமக்குடியில் ஏற்பட்டது போன்ற துப்பாக்கிச் சூடுகள் மறுபடியும் நடக்கக்கூடாது என்று மேலே இருந்து ஆர்டர்.. எனவே மருது பாண்டியர் ஜெயந்தி, தேவர் ஜெயந்தி போன்றவைகளுக்கு பந்தோபஸ்துக்குப் போகும் போலீஸார், தங்கள் துப்பாக்கிகளையும் லத்திக் கம்பையும் அந்தந்த ஸ்டேஷனில் ஒப்படைத்து விட்டு, அதற்கான கையெழுத்தையும் போட்டுவிட்டு, வெறும் கையோடுதான் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார் என்கிறார்கள்.
இந் நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி மருதுபாண்டியர் ஜெயந்தி சிவகங்கை மாவட்டத்தில் கொண்டாடப்பட்ட போது, வேம்பத்தூர் பகுதிக்கு வெறும் கையோடு பந்தோபஸ்துக்குப் போனதாம் டி.எஸ்.பி. கருணாநிதி தலைமையிலான டீம்.
சிப்காட் காவல் நிலைய எஸ்.ஐ. ராஜேஷ், மிகவும் பதற்றம் நிறைந்த புதுக்குளம், ஆவாரங்குளம் போன்ற கிராமங்களுக்குள் அடிக்கடி நுழைந்து தைரியமாக ரெய்டு நடத்தியதால், அவருக்குக் குறி வைத்துள்ளது புதுக்குளம் பிரபு என்ற ரெளடி தலைமையிலான கும்பல்.
இவர்களிடம் தான் திருப்பாச்சேத்தி காவல் நிலைய எஸ்.ஐ.ஆல்வின் சுதன் சிக்கிக் கொண்டார். துப்பாக்கி கொண்டு செல்லாததால் இவரை கல் வீசியும், கத்தியால் குத்தியும், தலையில் பாறாங்கல்லைப் போட்டும் அந்தக் கும்பல் கொலை செய்துள்ளது என்கிறார்கள்.
முன்னதாக எஸ்.ஐ. ஆல்வினுக்கு அஞ்சலி செலுத்த வந்த டி.ஜி.பி. ராமானுஜம் மானாமதுரையில் நிருபர்களிடம் கூறுகையில், இது எதிர்பாராத சம்பவம். சில அசம்பாவிதங்களைத் தடுக்கத்தான் போலீஸார் ஆயுதங்களைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது. இருப்பினும் சட்டவிரோதமாக கொலை கொள்ளையில் ஈடுபடுகிறவர்களிடம் ஆயுதம் பயன்படுத்தக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்குளம் பிரபுவுக்கு எண்கெளன்டர் ரெடி?:
இந் நிலையில் பிரபு போலீசாரிடம் சிக்கிவிட்டதாகவும், பரபரப்புகள் அடங்கிய பின்னர் அவனை தொடர்பான எண்கெளன்டர் செய்தி வரலாம் என்றும் தகவல்கள் கசிகின்றன.












Click it and Unblock the Notifications