இன்று அதிபர் தேர்தல்... நூலிழை வித்தியாசத்தில் ஒபாமா முன்னிலை!

தேர்தலின் இறுதி மணி நேரங்களில் வெளியாகியுள்ள வாஷிங்டன் போஸ்ட் - ஏபிசி கருத்துக் கணிப்பின்படி நாடு தழுவிய அளவில் ஒபாமாவுக்கு 50 சதவீத வாக்குகளும், ராம்னிக்கு 47 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளன. இந்த வாக்கு வித்தியாசத்தை மேலும் ஓரிரு சதவீதங்கள் உயர்த்தவே இப்போது ஒபாமா மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஒஹயோ, வர்ஜீனியா மற்றும் நியூ ஹாம்ப்ஷையர்தான் பேட்டில் கிரவுண்ட் எனப்படும் தேர்தல் போட்டிக் களம். தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் மாநிலங்கள் இவை. இன்றைய நிலவரப்படி இங்கெல்லாம் ஒபாமா வென்று விடும் வாய்ப்பு உள்ளது.
இதனால் இந்த மாநிலங்களில் திங்களன்று தீவிர பிரச்சாரம் நடந்தது. ஏற்கெனவே அழைத்த போன்களுக்கே திரும்ப அழைத்து வாக்கு கேட்டதும், தட்டிய கதவுகளையே மீண்டும் தட்டி வாக்கு சேகரித்ததுமாக, படு தீவிர பிரச்சாரம்.
தேர்தல் நாளன்று தான் பென்சில்வேனியா மற்றும் ஒஹயோவில் பிரச்சாரம் செய்யப் போவதாக ராம்னி அறிவித்துள்ளது எந்த வகை நம்பிக்கை என்று தெரியவில்லை. போட்டி கடுமையாக இருந்தாலும், அவரது ஆதரவாளர்களைப் பொறுத்தவரை களம் கைவிட்டுப் போய்விட்டதாகவே கருதுவது வெளிப்படையாகத் தெரிகிறது.
ஆனால் ஒபாமா தன் பிரச்சாரத்தை திங்களன்று விஸ்கான்ஸின், ஒஹயோ மற்றும் ஐயோவாவில் பேரணிகளோடு முடித்துக் கொண்டார். இந்த முறையும் அவருக்கு 270 வாக்குகள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் அவரது ஆதரவாளர்கள், கடந்த தேர்தலில் அவர் பயன்படுத்திய லோகோவுடன் ஊர்வலமாக வந்தனர்.
மேடிசனில் நடந்த பேரணியில் 18000 பேருக்கு மேல் பங்கேற்றனர்.
"என்னுடன் நீங்கள் பணியாற்ற விரும்பினால், சில கதவுகளை என்னுடன் சேர்ந்து தட்டுங்கள், சில போன்களுக்கு மீண்டும் டயல் செய்யுங்கள், வாக்குகளை சேகரியுங்கள்.. விஸ்கான்ஸின் நம் வசமாகிவிடும்... நாம் இந்தத் தேர்தலை வெல்வோம்.. எங்கே தொடங்கினோமை அதிலேயே முடிப்போம்," என்று ஒபாமா சொன்னபோது மொத்த மக்களும் ஆமோதித்தனர்.
ப்ளோரிடா, ஒஹயோ போன்ற முக்கிய மாகாணங்களில் வாக்குப் பதிவில் சில பிரச்சினைகளைக் கிளப்பியுள்ளனர். குறிப்பாக ஒஹயோவில் குறிப்பிட்ட சில முன்பதிவு வாக்குகளை பின்னர் எண்ணிக் கொள்ளலாம் என நீதிபதி அறிவித்துள்ளார். இதனால் இந்த வாக்குகள் நிலவரம் தெரிய 10 நாட்கள் வரை கூட ஆகலாம்.
முன்பதிவு வாக்குகளைப் பொறுத்தவரை, ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்கு முன்பு கிடைத்த வாக்குகள் கிடைக்குமா என்பது சந்தேகமே. கடந்த முறை ஐயோவாவில் 18 புள்ளிகள் கிடைத்தன. இந்தமுறை அது 10 ஆகக் குறைந்திருக்கிறது. ப்ளோரிடாவில் 10லிருந்து 4 ஆகக் குறைந்திருக்கிறது.
இதன் காரணமாகத்தான் ஒபாமா - ராம்னி இருவருக்கும் போட்டி மிகக் கடுமையாக மாறியிருக்கிறது.
எக்கச்சக்க பணம்...
உலகின் காஸ்ட்லி தேர்தல் என்றால் அது இந்தத் தேர்தல்தான். சில நகரங்களில் தேர்தல் விளம்பரங்களுக்கு நாளொன்றுக்கு 50000 டாலர்கள் என வசூலித்தார்கள். சில நகரங்களில் கூடுதல் விளம்பரங்கள் ஒளிபரப்ப நேரம் போதவில்லை என நிராகரிக்கும் அளவுக்கு விளம்பர மழை. குறிப்பாக ஒபாமாவுக்கு செல்வாக்கு மிக்க கலிபோர்னியா, நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில்.
முதல் வாக்குப் பதிவு காலை 6 மணிக்கு...
இன்றைய தேர்தலின் முதல் வாக்குப் பதிவு காலை 6 மணிக்கே தொடங்கிவிடும். மேரிலாண்டில் ஒரு மணிநேரம் தாமதமாகத் தொடங்கும். கடைசி வாக்குப் பதிவு நேரம் அலாஸ்காவில் இரவு 8 மணியாக இருக்கும்.
அதற்குள்ளாகவே, அதிபர் தேர்தலின் போக்கு தெரிந்துவிடும். ஏழு மாநிலங்கள்தான் இந்தத் தேர்தலைத் தீர்மானிக்கின்றன. அவற்றில் நான்கிலாவது ஜெயித்தால்தான் ராம்னி வெள்ளை மாளிகை செல்ல முடியும்.
ஆனால் ஒபாமாவுக்கு அந்த நெருக்கடி இல்லை. அவர் ஒரு மாகாணத்தில்... ப்ளோரிடாவில் மட்டும் ஜெயித்தாலே போதும். அல்லது ஒஹயோ - விஸ்கான்ஸின் அலஸ்லது ஒஹயோ - வர்ஜீனியாவில் மெஜாரிட்டி வந்தாலே வெள்ளை மாளிகையில் அடுத்த நான்காண்டுகளுக்கு உட்கார்ந்துவிடுவார்!
'ஒபாமாவுக்கு தேவையான 270 வாக்குகள் வரும் வழிகள் தெரிகின்றன. கடந்த ஆண்டே எங்களுக்கு தெளிவாக தெரிந்த விஷயம் இது' என்கிறார் ஒபாமாவின் தேர்தல் குழுவைச் சேர்ந்த நிபுணர் டேவிட் அக்ஸல்ராட்!
தன் கடைசி பிரச்சார பேச்சில், 'இனி எதுவும் என் கையில் இல்லை. உங்கள் கைகளில்தான் உள்ளது,' என்று கூறி முடித்தார் ஒபாமா. அமெரிக்க வாக்காளர்கள், தங்கள் கைகளில் உள்ள அதிகாரத்தின் சாவியை ஒபாமைவை நோக்கியே நீட்டத் தொடங்கியுள்ளார்கள் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாகவே தெரியத் தொடங்கியுள்ளன!












Click it and Unblock the Notifications