மடத்துக்குள் நித்தி வரவே கூடாது... தடுக்கக் கோரி மதுரை ஆதீனம் வழக்கு
மதுரை: மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா வரக் கூடாது. அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மதுரை கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை ஆதீனம், இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா ஆகியோர் சார்பில் மதுரை ஆதீனம் அறக்கட்டளை என்ற பெயரில் புதிய அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.
மடத்தின் சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.இதற்கு அறநிலையத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை. ஆதீனத்திற்கு சொந்தமான 2 சொத்துக்கள் இந்து அறநிலையத்துறைக்கு தெரிவிக்காமலும், அனுமதி பெறாமலும் குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
எனவே அவர், மதுரை ஆதீனம் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும். அடுத்த மடாதிபதி நியமிக்கப்படும் வரை மதுரை ஆதீன மடத்தை இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி குருவையா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அருணகிரிநாதர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவுக்கு, அரசு தரப்பில் பதில் அளிக்க வருகிற 9-ந் தேதிக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.
இந்த நிலையில், மதுரை ஆதீனம் தரப்பில் மேற்று மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுரை ஆதீனம் அறக்கட்டளையை நான் கலைத்துவிட்டேன். மதுரை தெற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த அறக்கட்டளையின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை ரத்து செய்ய சார்பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்.
இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தாவை நான் அந்த பொறுப்பில் இருந்து நீக்கி விட்டேன். எனவே அவரோ, அவர் தரப்பில் வேறு நபர்களோ மதுரை ஆதீன மடத்திற்குள் நுழையவோ, பொருட்களை அனுமதியின்றி பயன்படுத்தவோ தடை விதிக்க வேண்டும்இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பதிலளிக்குமாறு நித்தியானந்தாவுக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications