தாயை அடித்த தந்தையின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மகன் கைது
ராமநாதபுரம்: தாயை அடித்து கொடுமைப்படுத்தியதை காணமுடியாமல் தந்தையின் தலையில் மகன் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் போலீஸ் சரகத்தைச் சேர்ந்த சாமிப்பட்டியைச் சேர்ந்தவர் குருசாமி என்பவரின் மகன் மோகன் தாஸ் (50). இவரின் மனைவி ராக்கம்மாள் (45). இவர்களுக்கு 2 மகன், 3 மகள்கள்.
வடமாநில நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் பணி செய்த மோகன்தாஸ், விருப்ப ஓய்வு பெற்று ஓய்வுப் பணத்துடன் ஊர் திரும்பினார்.
இவரது இளைய மகன் ராஜ்குமார் (22) சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் கால் டாக்ஸி ஓட்டுநராகப் பணி செய்து வருகிறார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தீபாவளியை ஒட்டி விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்திருந்தார்.
கணவன் மனைவிக்கு இடையே ஓய்வூதியப் பணம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதில், மனைவியை குடித்து விட்டு, அடித்து உதைத்து மோகன் தாஸ் கொடுமைப் படுத்துவாராம். இதனைக் கண்ட மகன் ராஜ்குமார், தந்தை தடுக்கப் போக, அவருக்கும் அடி உதை விழுந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த ராஜ்குமார், அருகே கிடந்த கல்லை எடுத்து தந்தையின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் மோகன்தாஸின் மண்டை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்த பேரையூர் காவல்நிலைய போலீசார், ராஜ்குமாரைக் கைது செய்து கமுதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications