சர்க்கஸ் கூடாரத்தில் தீ: 25 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்… 500 பேர் உயிர் தப்பினர்
வேலூர்: வேலூரில், சர்க்கஸ் கூடாரம் தீ பற்றியதில் 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. கூடாரத்தினுள் பொதுமக்கள் யாரும் இல்லை என்பதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
கேரளா மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த அரவிந்த் நாயர், "கிரவுன் சர்க்கஸ்' கம்பெனி நடத்தி வருகிறார். அக்டோபர், 10ம் தேதி முதல் வேலூர் பெங்களூரு ரோடு கொணவட்டம் அடுத்த முள்ளிப்பாளையத்தில் சர்க்கஸ் நடந்து வருகிறது.
இதில், 25 ஒட்டகம், 34 குதிரை, 35 குரங்கு, 35 நாய் மற்றும், 350 சர்க்கஸ் கலைஞர்கள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் செய்து வந்தனர்..
நேற்றோடு கடைசி நாள் என்பதால் மாலை, 4 மணி காட்சிக்கு, மதியம், 3 மணியில் இருந்து டிக்கெட் விற்பனை நடந்தது. 500 பேர் டிக்கெட் வாங்கியிருந்தனர். கூடுதல் கூட்டத்தை எதிர்பார்த்து, காட்சி நேரம், 4 மணிக்கு பதில், 5 மணிக்கு துவங்க சர்க்கஸ் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனால், டிக்கெட் வாங்கியவர்கள் காட்சியை காண சர்க்கஸ் மைதானத்துக்கு வெளியே நின்றிருந்தனர்.
இந்த நிலையில் தீடீரென்று சர்க்கஸ் கூடாரத்தில், பைக்கில் சாகசம் செய்யும் இரும்பு கூண்டில் இருந்து திடீரென தீப்பற்றி புகை வந்தது. இதை பார்த்த சர்க்கஸ் ஊழியர்கள், அணைக்க ஓடி வந்தனர். அதற்குள் சர்க்கஸ் கூடாரம் முழுவதும் தீ பரவியது. பத்து நிமிடத்தில், 40 அடி உயரமுள்ள கூடாரம் முழுவதும் எரிந்து சாம்பலானது.
இதில் கூடாரத்தில் இருந்த சேர்கள், மர காலரிகள் என அனைத்தும் தீயில் கருகியது. தீ பற்றியதில் கூடாரத்தில் இருந்த விலங்குகள் கூச்சலிட்டன. இதனையடுத்து குதிரைகள், ஒட்டகங்களை ஊழியர்கள் அவிழ்த்து விட்டனர். அவை கொணவட்டம் சாலையில் ஓடிச்சென்றது. வேலூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வருவதற்குள் கூடாரம் முற்றிலும் எரிந்து போனது. மிச்சம், மீதி எரிந்து கொண்டிருந்ததை, தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
அப்போது, 5 மணி காட்சிக்கு டிக்கெட் வாங்கியவர்கள் பணத்தை திருப்பித் தரக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் வெளியில் நின்று இருந்த ஒட்டகம், குதிரைகளை அழைத்து செல்ல முயன்றனர். அவர்களுடன் சர்க்கஸ் மேலாளர் உன்னி, பேச்சு வார்த்தை நடத்தினார். வியாழக்கிழமை காலை, 10 மணிக்கு வந்து, டிக்கெட் கொடுத்து விட்டு பணத்தை பெற்றுக் கொள்ளும்படி அவர் தெரிவித்தார்.
சர்க்கஸ் கூடாரத்தில் பின்னால் உள்ள குடிசை பகுதிகளில் இருந்து, ராக்கெட் பறந்து வந்து விழுந்ததால், தீ பிடித்து எரிந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. "இதில், 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது' என, சர்க்கஸ் மேலாளர் உன்னி கூறினார்.
மாலை நேரக்காட்சி ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியதால் தீ விபத்தில் சிக்காமல், 500 பேர் உயிர் தப்பியுள்ளனர் என்று போலீசார் கூறினர்.












Click it and Unblock the Notifications