போலி ஆவணம் தந்து ‘சிம்’ கார்ட் வாங்கினால் போலீஸ் நடவடிக்கை பாயும்: மத்திய அரசு எச்சரிக்கை

போலியான ஆவணங்கள் தந்து சிம் கார்ட் வாங்கினால் போலீஸ் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
போலியான ஆவணங்களைக் கொடுத்து சிம் கார்ட் வாங்கி, செல்போன் இணைப்புகளைப் பெறுவது அதிகரித்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, செல்போன் சேவை இணைப்புகளைப் பெறுவதற்கு புதிய வழிமுறைகளை மத்திய தொலைத் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.
- 'ப்ரி பெய்ட்' மற்றும் 'போஸ்ட் பெய்ட்' செல்போன் இணைப்புகளை பெறுவதற்கு வாடிக்கையாளர் தவறான தகவல்களை கொடுத்தால் அதற்கு செல்போன் சேவை நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும்
- சிம் கார்ட்களை விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர், விண்ணப்பதாரரையும், அவரது விண்ணப்பத்தில் ஒட்டப்பட்டுள்ள உருவப்படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து, ‘‘நான் விண்ணப்பதாரரை நேரில் பார்த்தேன், விண்ணப்பத்துடன் ஒட்டப்பட்டுள்ள போட்டாவை ஒத்துப் பார்த்தேன்'' என்று சான்றளிக்க வேண்டும்.
- போலியான ஆவணங்கள் தந்து யாராவது செல்போன் சேவை இணைப்பை பெற்று விட்டதாக சிம் கார்ட் விற்பனையாளருக்குத் தெரிய வந்தால், இது தொடர்பாக செல்போன் சேவை நிறுவனத்தின் கவனத்துக்கு உடனே கொண்டு சென்று, 15 நாளில் போலீசில் புகார் செய்து வழக்குத் தொடர வேண்டும்.
- ஒருவருக்கு தெரியாமல் அவரது அடையாளம், இருப்பிட சான்றுகளை வழங்கி மற்றொருவர் செல்போன் சிம் கார்ட் வாங்கினால், அப்படி செல்போன் சிம் கார்டினை விற்பனை செய்த சில்லறை விற்பனையாளர் மீது செல்போன் சேவை நிறுவனம் வழக்கு தொடர வேண்டும்.
- சிம் கார்ட் வாங்குவதற்கு வாடிக்கையாளர் அளித்த அடையாளம் மற்றும் முகவரி நகல் சான்று ஆவணங்களை அசல் ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரி பார்த்து, சில்லறை விற்பனையாளர் கையெழுத்திட வேண்டும்.
- சிம் கார்ட் இணைப்புக்குரிய சேவையை வழங்குவதற்கு முன்பாக செல்போன் சேவை நிறுவனம், பெறப்பட்ட விண்ணப்பத்தில் தரப்பட்டுள்ள தகவல்கள் சரியானவை என்று சான்றளிக்க வேண்டும்.
இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.












Click it and Unblock the Notifications