இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி?

பின்னணி
வெலிக்கடை சிறை, இலங்கையின் முக்கியமான சிறையாகும். இந்த சிறையில்தான் 1983-ல் தமிழ் அரசியல் தலைவர்களான குட்டிமணி, ஜெகன் மற்றும் தங்கத்துரை உள்ளிட்ட 50 தமிழ் அரசியல் கைதிகளை சிங்கள இனவெறியர்கள் படுகொலை செய்தனர். இச்சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 200க்கும் மேற்பட்டோர் ஈழத் தமிழர்கள். நீண்டகாலமாக அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டிருக்கும் தங்களை விடுதலை செய்யக் கோரி இவர்கள் பல முறை இதே வெலிக்கடை சிறைச்சாலையில் பல போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
கலவரம் மூண்டது எப்படி?
இந்நிலையில் வெலிக்கடை சிறையில் சிறப்பு அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென நேற்று பிற்பகல் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். வழக்கமாக சிறைக் காவலர்கள்தான் இத்தகைய சோதனையை மேற்கொள்வர். நேற்று அதிரடிப்படையினர் சோதனை நடத்தினர். மேலும் சில கைதிகளை கட்டிப் போட்டும் சோதனை நடத்தியிருக்கின்றனர். இதனால்தான் கைதிகள் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. முதலில் அதிரடிப்படையினர் மீது கற்கள் வீசப்பட்டது.
ஆயுதக் களஞ்சியம் உடைப்பு
இதனால் சிறப்பு அதிரடிப் படையினர் கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக சிறைச்சாலையின் ஆயுதக் கிடங்கை உடைத்த கைதிகள் அங்கியிருந்த 300க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை கைப்பற்றி பதில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்
ராணுவம் குவிப்பு
கைதிகளின் பதில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை எதிர்பார்க்காத சிறப்பு அதிரடிப்படையினர் ராணுவத்தை வரவழைத்தனர். ராணுவத்தினருக்கும் கைதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற நிலையில் சில கைதிகள் சிறையின் மதிலை உடைத்து தப்பித்துள்ளனர். அவர்களையும் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இம்மோதலில் சிறப்பு அதிரடிப்படையின் தலைமை அதிகாரி ரணவான உட்பட 45 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படனர்.
சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி நின்றும் படையினருக்கு எதிராக கைதிகள் தாக்குதல்களை நடத்தினர். இன்று அதிகாலை வரை வெலிக்கட சிறையில் மோதல் நடைபெற்றதாகவும் துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் தகவல்
இம்மோதலில் மொத்தம் 16 கைதிகள் கொல்லப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலைதான் வெலிக்கடை சிறைச்சாலை ராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாகவும் இன்று காலை சிறைச்சாலைக்குள் இருந்து மேலும் 11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சந்திரசிறீ கஜதீர தெரிவித்திருக்கிறார்.
தமிழர்களின் கதி?
மேலும் கைதிகள் வசம் இருந்த 340 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டதாகவும் இலங்கை அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. சிறை மோதலில் 200 ஈழத் தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரிவிக்கப்படவில்லை. இதேபோல் இந்த சிறையில் தமிழகத் தமிழர்கள் உட்பட 35 இந்தியர்கள் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் கதி என்ன என்று இதுவரை தெரியவில்லை.












Click it and Unblock the Notifications