தீபாவளியை ஜாலியா கொண்டாடுங்க.. பாதுகாப்புக்கு 1500 தீயணைப்பு வீரர்கள் ரெடி!
சென்னை: தமிழகம் முழுவதும் தீபாவளியை மக்கள் பாதுகாப்புடன் கொண்டாடுவதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தலைநகர் சென்னையில் மட்டும் 1500 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனராம். அதேபோல காவல்துறையினரும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைளில் இறங்கியுள்ளனர்.
13ம் தேதி செவ்வாய்க்கிழமை தீபாவளிப் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதேபோல நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. இப்போதே பலர் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கி விட்டனர். புத்தாடை பர்ச்சேஸ் கடைசி நிமிடத்திலும் கூட படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் ஜவுளிக் கடைகள், இனிப்புக் கடைகள், பட்டாசுக் கடைளில் கூட்டம் கட்டி ஏறி காதை அத்துக் கொண்டிருக்கிறது. பட்டாசு விலை இந்த ஆண்டு கடுமையாக உயர்ந்திருந்தாலும் கூட மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் பட்டாசுகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.
சென்னையில் 1500 தீயணைப்பு வீரர்கள்
சென்னையில் தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீவிபத்துகளைச் சமாளிக்கவும், மின்னல் வேகத்தில் உரிய இடங்களுக்குச் சென்று தீயை அணைக்க வசதியாகவும் 1500 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனராம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 33 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு நிலையத்திலும் 3 அல்லது 4 வண்டிகள் எப்போதும் நிறுத்தப்பட்டிருக்கும். தீபாவளியையொட்டி ஒரு வாகனம் தவிர மற்ற வாகனங்கள் அனைத்தையும் பொது இடங்களில் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் 32 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 32 தீயணைப்பு வாகனங்களும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இன்று மாலை கொண்டு செல்லப்படுகிறது.
தி.நகர், பனகல் பார்க், மயிலாப்பூர் லஸ் கார்னர், அசோக் நகர், அம்பேத்கர் சாலை குடிசைப்பகுதி, பெசன்ட் நகர் பஸ் நிலையம், நொச்சிக்குப்பம், வடபழனி சிக்னல், வேளச்சேரி பஸ் நிலையம், கத்திப்பாரா சிக்னல், தாம்பரம், மேடவாக்கம், நுங்கம்பாக்கம், திருமங்கலம் சந்திப்பு, அண்ணாநகர் ரவுண்டானா, புரசைவாக்கம் டாணா தெரு, பூக்கடை, தண்டையார் பேட்டை, ராயபுரம், வியாசர்பாடி பக்தவச்சலம் நகர், எண்ணூர், எர்ணாவூர் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்படும் தீயணைப்பு வாகனங்கள் வருகிற 14-ந்தேதி காலை வரை பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
ராத்திரி வெடிக்கக் கூடாது
இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை காதை பிளக்கும் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு தொந்தரவு செய்ததாக கூறி, இவர்களுக்கு ரூ.1000 வரை அபதாரம் விதிக்கவும் சட்டத்தில் இடமிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications