தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம்
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள ஊத்துமலை என்ற ஊரில் தேவர் சிலை மீது சில விஷமிகள் சாணியை ஊற்றி அவமதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊத்துமலை பஸ் நிலையம் அருகே தேவர் சிலை உள்ளது. பாதுகாப்புக்காக இந்த சிலையை சுற்றிலும் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தேவர் குருபூஜைக்காக சென்ற 6 பேர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த சிலை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நள்ளிரவு பாதுகாப்பு நின்ற போலீசார் இல்லாத வேளையில் மின்தடையை பயன்படுத்தி ஒரு கும்பல் தேவர் சிலை மீது சாணம் ஊற்றி அவமரியாதை செய்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை தேவர் சிலை மீது சாணம் ஊற்றப்பட்டுள்ளதை பார்த்த ஊத்துமலை பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர்.ஆண்களும், பெண்களும் சிலை முன்பு கூடினார்கள். திடீரென்று அவர்கள் கையில் கருப்பு கொடியுடன் சாலை மறியல் செய்தனர். சாலைகளில் முட்களை வெட்டியும், கற்களை போட்டும் தடைகளை ஏற்படுத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் அங்கேயே நிறுத்தப்பட்டது. மறியல் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ஏடிஎஸ்பி மகேந்திரன், டிஎஸ்பிக்கள் ஆலங்களம் லயோலா இக்னோஷியஸ், தென்காசி கலிலூல்லா, இன்ஸ்பெக்டர்கள் ஆலங்குளம் சுரேஷ்குமார், பாவூர்சத்திரம் ஜமால், கடையம் ராபின்சன், சங்கரன்கோவில் ஜெயக்குமார் மற்றும் ஏராளமான போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். விகேபுதூர் தாசில்தார் குருசந்திரனும் சம்பவ இடத்துக்கு வந்தார்.
தேவர் சிலையை அவமரியாதை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த தகவல் அக்கம்பக்கத்திலுள்ள கிராமத்திலும் பரவியது. ஏத்தனூர் என்ற கிராமத்திலும் பொதுமக்கள் சாலையில் கற்களை போட்டு தடைகளை ஏற்படுத்தினர். இதை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதனால் பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications