குழந்தைகள் தின 'கூகுள் டூடுல்' போட்டி: சண்டிகர் மாணவர் வெற்றி

உலக அளவில் பிரபலமான தலைவர்களின் பிறந்தநாள், வரலாற்று நாயகர்களின் பிறந்த நாள் மற்றும் சிறப்பு தினங்கள் ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் கூகுள் தனது வலைப்பக்கத்தில் சிறப்பிக்கும். கண்ணைக் கவரும் அம்சங்கள் கொண்ட அந்தப் பக்கங்களே கூகுள் டூடுல் எனப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி, இந்திய மாணவர்களுக்கு கூகுள் இந்தியா டூடுல் ஃபார் கூகுள் போட்டிக்காக ‘வேற்றுமையில் ஒற்றுமை' என்ற தலைப்பில் போட்டியை அறிவித்தது.
இந்தப் போட்டியில் இந்தியா முழுவதும் 60 நகரங்களைச் சேர்ந்த 2,00,000 சிறுவர், சிறுமிகள் தங்கள் கற்பனையில் டூடுல்களை வரைந்து அனுப்பினர். டெல்லியில் உள்ள ரயில் அருங்காட்சியகத்தில் திங்கட்கிழமை வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதில், சண்டிகரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் அருண் குமாரின் டூடுல், குழந்தைகள் தினத்தன்று கூகுள் இந்தியாவில் வெளியிட தேர்ந்தெடுக்கப்பட்டது. கால்பந்து வீரர், கதகளி நடனக் கலைஞர், மயில், விவசாயி மற்றும் பூக்களைக் கொண்டு கூகுள் டூடுலை அவர் கண்ணைக்கவரும் வகையில் அவர் உருவாக்கியுள்ளார். அந்த டூடுல்தான் இன்றைய தினம் கூகுளின் முகப்புப் பக்கத்தை அலங்கரிக்கிறது.
இந்தப் போட்டியில் கோழிக்கோடைச் சேர்ந்த வாசுதேவன் தீபக், பெங்களூரைச் சேர்ந்த ஷ்ர்வயா மற்றும் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ப்ரீத்தம் பால் ஆகிய மூன்று மாணவர்களும் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.பிரபல கார்ட்டூனிஸ்ட் அஜித் நினான் மற்றும் நடிகர் போமன் ஹிரானி ஆகியோர் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த 4 ஆண்டுகளாக கூகுள் டூடுல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications