வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 2,800 சிறப்பு பேருந்துகள்: தென்மாவட்டத்திலோ திண்டாட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகர்கள், முக்கிய நகர்களில் இருந்து கடந்த 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை கோயம்பேட்டில் இருந்து 2,828 பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு சென்றன. கடந்த 9ம் தேதி 768 சிறப்பு பேருந்துகள், 10ம் தேதி 633ம், 11ம் தேதி 543ம், 12ம் தேதி 884 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இது தவிர பிற மாவட்டங்களில் இருந்து 403 சிறப்பு பேருந்துகள் விடப்பட்டன. பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்ப வசதியாக நேற்று இரவு முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு விடப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் வரும் 16ம் தேதி வரை இயக்கப்படும்.
தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் விடப்பட்டதால் 5 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயனடைந்துள்ளனர்.
தென்மாவட்ட மக்கள் திண்டாட்டம்:
தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய மக்கள் பணிகளுக்கு திரும்ப திண்டாடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள், தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் பல்லாயிரக்கணக்கானோர் வடமாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் திணறி தீபாவளி அன்றே ஊர் வந்து சேர்ந்தனர். மேலும் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு உத்தரவிட்டாலும் ஏராளமான மண்டலங்களில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
தென்மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வடமாவட்டங்களிலும், வடமாநிலங்களிலும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். பல்வேறு சிரமங்களுக்கு இடையே சொந்த ஊர் வந்த அவர்கள் தீபாவளியை முடித்துக் கொண்டு 13ம் தேதி முதலே குடும்பத்துடன் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
நெல்லை மாவட்டத்திலிருந்து நேற்று சென்னை சென்ற 20க்கும் மேற்பட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள், நெல்லை மண்டல சிறப்பு பேருந்துகளும் நிரம்பி வழிந்தன. தென்காசி வழியாக சென்னை செல்லும் 20 விரைவு பேருந்துகளும், திருப்பதி, பெங்களூர், ஒசூர், கோவை செல்லும் அனைத்து பேருந்துகளும் 15ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே போன்று நெல்லை வழியாக கேரளா, நாகர்கோவில், தூத்துக்குடியிலிருந்து வரும் 40க்கும் மேற்பட்ட அரசு விரைவுப் பேருந்துகளும் ஏற்கனவே முன்பதிவாகிவிட்டதால் பயணிகள் ஊர் திரும்ப அலை மோதி வருகின்றனர்.
தென்னக ரயில்வேயால் புறக்கணிக்கப்பட்டு வரும் சிவகாசி முதல் செங்கோட்டை வரை வசிக்கும் பல லட்சம் மக்கள் நம்பி பயணம் செய்யும் ஒரே ஒரு ரயிலான பொதிகை எக்ஸ்பிரஸும் கூட நெரிசலால் நிரம்பி வழிகிறது. கூட்ட நெரிசலில் தீபாவளி கொண்டாடிட சொந்த ஊர்களுக்கு வந்தவர்கள் நேற்று மாலை முதல் பணி செய்யும் ஊர்களுக்கு பயணிக்க பேருந்து, ரயில்களில் இடமின்றி திணறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications