பனி வந்துருச்சே, இனி மழை வராதா, அவ்ளோதானா?.. பெரும் கவலையில் மக்கள்!

தற்போது வட கிழக்குப் பருவ மழைக் காலம் நடந்து வருகிறது. ஆனால் நடப்பதைப் பார்த்தால் அப்படி ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. காரணம், அந்த அளவுக்கு தமிழகம் வறண்டு போய் வருகிறது.
இந்த முறை பருவ மழைக் காலம் தொடங்கிய சில நாட்கள் வரை ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தது. ஒரு முறை நல்ல பலத்த மழையும் பெய்தது. ஒரு புயலும் கூட வந்து போய் விட்டது. ஆனால் புயலால் பெருமளவில் நமக்கு மழை கிடைக்கவில்லை என்பதே உண்மை. குறிப்பாக சென்னைக்கு பெரிய அளவில் புயலால் மழை கிடைக்கவில்லை.
இருப்பினும் பல பகுதிகளில் வழக்கத்தை விட கூடுதலான மழை கிடைத்துள்ளதாக வானிலை மையம் கூறுகிறது. அதேசமயம் தற்போது பெய்துள்ள மழை ஒட்டுமொத்தமாக போதுமானதாக இல்லை என்பதே நிதர்சனம்.
லேட்டஸ்ட் வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் எங்குமே நேற்றும் சரி, இன்றும் சரி மழை பெய்யவில்லை. கேரளாவில் மட்டும் இரண்டு இடங்களில் தலா ஒரு சென்டி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது.
வரும் 16ம் தேதி வரையிலான வானிலை முன்னெச்சரிக்கை என்னவென்றால், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் பரவலாக, லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்பதே. ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் வானிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் தமிழகத்தில் தற்போது பல இடங்களில் பனி கொட்டத் தொடங்கியுள்ளது. இரவு மற்றும் அதிகாலையில் பனி கொட்டுகிறது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே பகலிலும் கூட இதமான வெப்பநிலையே காணப்படுகிறது. அதேசமயம், பகல் பொழுதில் நல்ல வெயிலும் அடிக்கிறது.
பனி பெய்யத் தொடங்கினால் மழை பெய்யாது என்பார்கள். எனவே பனி பெய்யத் தொடங்கியிருப்பதால் இனி மழை வராதோ என்ற ஏமாற்றத்தில் மக்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications